கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முழுமையாக மறுஆய்வு செய்யப்படவேண்டும் என்று பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பொதுவாக சிங்கப்பூர் அரசாங்கத்துடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் தெளிவு, விரைந்து முடிவெடுக்கும் திறன் போன்ற அம்சங்களை இம்முறை கொரோனா கிருமிப்பரவல் நெருக்கடியைக் கையாளும்போது காண முடிவதில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது,” என்று திரு பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.
பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு இடைவெளி தளர்த்தப்பட்டுவிட்டபோதும், ஒருவரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியைப் பார்க்க இருவர் மட்டுமே செல்ல முடியும் என்பது போன்ற சில எடுத்துக்காட்டுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளையில், இப்போதைய சூழலில் அரசியல் செய்வதைத் தள்ளிவைத்துவிட்டு, ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் மீள முடியும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் சொன்னார்.
அடிக்கடி மாற்றப்படும் தெளிவற்ற விதிகளால் மக்கள் சோர்வடையக்கூடும் என்றார் பாட்டாளிக் கட்சியின் தொகுதியில்லா எம்.பியான திரு லியோன் பெரேரா. வெவ்வேறு தகுதி நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் முறைகளுடன் ஏராளமான நிவாரணத் திட்டங்கள் இருப்பதால் மக்கள் குழம்பிப் போகலாம் என்றும் அவர் சொன்னார்.