கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டத்தால் பல உள்ளகப் பயிற்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டதையும் அது உயர்கல்வி நிலைய மாணவர்களுக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளதையும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆயினும், தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகிய உயர் கல்வி நிலையங்கள், மாணவர்களின் கற்றல் விளைவுகளிலும் பட்டம் பெறும் நேரத்திலும் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதைத் தணிப்பதற்கான மாற்று வழிகளை அடையாளம் காண பெருமுயற்சி செய்து வருகின்றன என்று அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.
உள்ளகப் பயிற்சிகளை மறுஅட்டவணைப்படுத்த சாத்தியமில்லை எனில், தொழிலகம் சார்ந்த பணித்திட்டங்கள், கூடுதல் பாடத்தொகுதிகள் போன்ற மாற்று வழிகளை அவை வழங்கும்.
கொரோனா பரவும் சூழலில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், உயர்கல்வி நிலையங்கள் தங்களது பரந்த நிறுவனங்கள், முதலாளிகள் கட்டமைப்பைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளையும் வேலை-கல்வித் திட்டங்களையும் பெற்றுத் தர முயன்று வருவதாக திரு ஓங் சொன்னார்.
சிரமமான சூழலிலும், பல நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுக்கவும் காலிப் பணியிடங்கள் இல்லாத நிறுவனங்கள் வேலைப் பயிற்சி வழங்கவும் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
‘எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்கள் தொகுப்பு’ மூலம் உருவாக்கப்படும் கிட்டத்தட்ட 100,000 வேலைகள், வேலைப் பயிற்சி மற்றும் திறன் தேர்ச்சி வாய்ப்புகளையும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள உயர்கல்வி நிலையங்கள் உதவும்.
அந்தக் கல்வி நிலையங்களின் வாழ்க்கைத்தொழில் நிலையங்களும் பட்டதாரிகளுக்கு உதவும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.
வேலைச் சந்தையில் சற்று தாமதமாக அடியெடுத்து வைக்க விரும்பும் மாணவர்கள் புதிய தேர்ச்சிகளையும் அறிவையும் பெறும் விதமாக தொடர் கல்வியும் பயிற்சிப் பாடத்தொகுதிகளும் இலவசமாக அவர்களுக்கு வழங்கப்படும்.
அந்தப் பாடத்தொகுதிகளை ஒரு தொடர்ச்சியான திட்டமாகக் கட்டமைத்து, அதை முடிப்பவர்களுக்குத் தகுதிச்சான்று வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு, உயர்கல்வி நிலையங்களுடன் பணியாற்றி வருகிறது.
மேல்நிலை, நிபுணத்துவப் பட்டயம் போன்ற படிப்புகளில் மேற்கல்வி பயிலவும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
“அசாதாரணமான சூழலில் புதிய பட்டதாரிகள் வேலைச் சந்தையில் நுழைகின்றனர். வேலை கிடைப்பதில் பலரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். எல்லாப் பட்டதாரிகளும் ஊழியரணியில் இணைய உயர்கல்வி நிலையங்களும் பல்வேறு அரசாங்க அமைப்புகளும் தங்களால் ஆன ஆதரவை வழங்கும்,” என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.