கொரோனா கொள்ளைநோய்க்கு எதிராக உலகமெங்கும் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுவரும் வேளையில் சிங்கப்பூரும் அதன் பங்குக்கு தடுப்பூசி தயாரிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டு வருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மருந்து உற்பத்தி தொடர்பான சிறப்பு குத்தகைகளை வழங்க சிங்கப்பூர் எண்ணியுள்ளது என்றும் திரு லீ நேற்று கூறினார்.
மருந்தியல் தொழில்துறையில், மருந்துகளையும் தடுப்பூசிகளையும் தயாரிக்க, குத்தகை மேம்பாடு மற்றும் உற்பத்தி அமைப்புகள் ஆகியவை தங்கள் சேவைகளை நிறைவேற்ற சிறப்பு குத்தகைகள் வழங்கப்படும்.
“இதன் மூலம் அந்த அமைப்புகளுக்கு தங்கள் உற்பத்தியில் வேகத்தை அதிகப்படுத்தவும் தங்கள் உற்பத்தி செய்யும் முயற்சிக்குத் தேவைப்படும் பாதுகாப்பையும் உயர்தரநிலையில் சிங்கப்பூர் வழங்கும்,” என்று குறிப்பிட்ட பிரதமர், நேற்று நடைபெற்ற உலகளாவிய தடுப்பூசி உச்சநிலைக் கூட்டத்தில் பேசினார்.
பிரிட்டிஷ் அரசாங்கமும் ‘காவி’ எனும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும் நேற்று கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்த மெய்நிகர் கூட்டத்தில் திரு லீ பேசினார்.
“கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுக்குள் வைத்து வாழ்க்கையை வழக்கநிலைக்குக் கொண்டுவர, பாதுகாப்பான, ஆற்றல்மிக்க தடுப் பூசியின் கண்டுபிடிப்பு, தயாரிப்பு, விநியோகம் ஆகியவை இன்றியமை யாதவை.
“நாம் நமது எண்ணங்களையும் வளங்களையும் ஒன்றிணைத்து, பங்காளித்துவத்தை மேம்படுத்தி, தடுப்பூசி கண்டுபிடிப்பு மூலம் பலதரப்பு ஒற்றுமையைப் பலப்படுத்த இந்த உச்சநிலைக் கூட்டம் உதவும்,” என்றும் திரு லீ கூறினார்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக உலகளாவிய போரில் சிங்கப்பூரும் பல வழிகளில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறது. கிருமிப் பரவலை எதிர்த்துப் போரிடும் அனைத்துலக முயற்சிகளுக்கும் புதிய தடுப்பூசி தொடர்பான ஆய்வு முயற்சிகளுக்கும் நிதியுதவி வழங்குவது அவற்றில் அடங்கும்.
“கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நாடுகளின் ஒருமித்த, கடப்பாடுமிக்க முயற்சி தேவை,” என்று கூறிய பிரதமர் லீ, “இந்த உலகளாவிய முயற்சியை சிங்கப்பூர் வரவேற்கிறது,” என்றும் வலி யுறுத்தினார்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான அனைத்துலக முயற்சியை வழிநடத்தும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் அத்தியாவசிய மருத்துவச் சாதனங்கள், மருத்துவ பொருட்கள் வழங்கியதுக்கும் சிங்கப்பூர் இதுவரை $18 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது.