சான்: பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுவனங்களுக்கு நீண்டகாலப் போக்கில் உதவும்

சான்: பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறுவனங்களுக்கு நீண்டகாலப் போக்கில் உதவும்

2 mins read
727b3425-c6be-4e9f-87eb-7ad17b8e7a43
பிரிமா மாவு அரவை ஆலையில் பொட்டலம் கட்டும் பணியை மேற்பார்வையிடுகிறார் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலையிடங்களில் பாதுகாப்பான நிர்வாக முறைகளை நடைமுறைப்படுத்துவதால் நிறுவனங்களுக்குக் கொஞ்சம் செலவு கூடும், சங்கடம் ஏற்படும் என்றாலும் நீண்டகாலப்போக்கில் அதனால் பலன்கள் உண்டு என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.

பொருளியலின் மற்ற பகுதிகளை வேகமாகத் திறந்துவிடவும் அதனால் உதவி கிட்டும் என்றார் அவர்.

வீட்டிலேயே தொடர்ந்து வேலை பார்க்க ஊழியர்களை அனுமதித்தால் கிருமித்தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து குறையும். ஆகையால் முதலாளிகளுக்கு நிலைத்தன்மை கூடும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்தார்.

பிரிமா லிமிடெட் என்ற உணவுத் துறை நிறுவனத்தின் மாவு அரவை ஆலையை நேற்று அமைச்சர் பார்வையிட்டார்.

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க நடப்பில் உள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் நடைமுறைச் செலவு கூடுகிறது என்று சில நிறுவனங்கள் தெரிவித்து இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நீண்டகால அடிப்படையில் இதனால் நிறுவனங்களின் போட்டித்திறன் அனுகூலம் அதிகரிக்கும் என்றும் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தோதான சூழ்நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டார்.

தொழில்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதைக் கூடுமான வரையில் குறைத்துக்கொண்டு உயர் பாதுகாப்புத் தரங்களை உறுதிப்படுத்துவதால் நிறுவனங்களுக்கு நீண்டகால அடிப்படையில் நன்மை இருக்கும் என்றார் திரு சான்.

வேலையிடங்களில் கடுமையான துப்புரவு நடவடிக்கைகளை அமல்படுத்தி இருந்தால் தரமான பொருள் தங்களுக்குக் கிடைக்கும் என்று வாடிக்கையாளர்கள் அதிகம் நம்புவார்கள். இதனால் அத்தகைய நிறுவனங்களின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குக் கிராக்கி கூடும் என்று அமைச்சர் விளக்கினார்.

நீண்டகால அடிப்படையில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது போன்ற நீக்குப்போக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து அதிகமாக கடைப்பிடித்து வரும் நிறுவனங்கள், ஆற்றல்மிக்கவர்களைக் கவர்ந்து ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் திரு சான் தெரிவித்தார்.

ஆகையால் நிறுவனங்கள் தேவையான நடவடிக்கைகளை அமல்படுத்தி தங்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்று திரு சான் வலியுறுத்திக் கூறினார்.

"பயந்துகொண்டு நிறுவனங்கள் தங்களுக்குத் தாங்களே பாதிப்பை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. எந்த அளவுக்கு நிறுவனங்கள் அதிக ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி செய்கின்றனவோ அந்த அளவுக்கு நிறுவனங்கள் மீண்டும் செயல்பட அரசாங்கம் வேகமாக அனுமதிக்கும் நிலை ஏற்படும்," என்றார் திரு சான்.

வீட்டிலிருந்தே வேலை பார்க்க முடியும் என்றாலும் தங்கள் முதலாளிகள் தங்களை வேலை இடத்திற்கு வந்து வேலை பார்க்கும்படி கட்டாயப்படுத்துவதாகச் சில ஊழியர்கள் புகார் தெரிவித்து இருப்பதை அமைச்சர் சுட்டினார்.

இப்படி சுயநலத்துடன் நடந்துகொள்ளும் நிறுவனங்கள் சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைத் தாமதப்படுத்தக்கூடும் என்று திரு சான் எச்சரித்தார்.