பங்ளாதேஷ் நாட்டவர் ஒருவரை ஏமாற்ற நான்கு பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு ஒரு திட்டத்தைத் தீட்டியது. அவர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி போல நடித்தார்.
பங்ளாதேஷுக்குப் பணம் அனுப்பும் பொறுப்பை ஏற்றிருந்த பாதிக்கப்பட்டவரிடமிருந்து $140,000க்கு மேற்பட்ட மதிப்புள்ள ரொக்கத்தையும் நகையையும் ஏமாற்றுக் கும்பல் வெற்றிகரமாகக் களவாடியது.
அவர்களில் மூவரான 33 வயது இஸ்லாம் முகம்மது நூருல், 38 வயது சொஃபியான் அபு, 35 வயது பாபுல் முகம்மது ஆகியோர் கைதாகினர்.
அவர்களுக்கு நேற்று தலா 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் மூவரும்கூட பங்ளாதேஷ் நாட்டவர். ஏமாற்றுக் கும்பலின் நான்காவது உறுப்பினரான 29 வயது ஆங் ஸாவ் ஹோங் எனும் சிங்கப்பூரரின் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
ஏமாற்றப்பட்ட 45 வயது பங்ளாதேஷ் நாட்டவரான சமனிடம் தனது சக நாட்டவர்கள் கொடுத்த பணம் அதிக அளவில் உள்ளது என்று தெரிந்துகொண்ட பாபுல் அதை இஸ்லாம், சொஃபியான் இருவரிடம் தெரிவித்தார். அது பற்றி ஆங்கும் தெரிந்துகொண்டார். பின்னர் அவர்கள் திட்டம் தீட்டினர்.
ராபர்ட்ஸ் லேனில் உள்ள ஸமான் சென்டரின் நான்காவது மாடியில் சமன் பணத்தை வைத்துள்ளார் என்று தெரிந்துகொண்ட அவர்களில் ஆங் மட்டும் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பின்னிரவு 12.30 மணிக்கு சமனும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தார்.
சொஃபியான் அறைக்கு வெளியே நின்றிருக்க, இஸ்லாம், பாபுல் இருவரும் ஸமான் சென்டருக்கு வெளியே சாலையோ ரத்தில் நின்றிருந்தனர்.
தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலிஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட ஆங், யாரையும் நகரக்கூடாது என்று கூறி, அறையில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறக்கும்படி சமனிடம் சொன்னார்.
அந்தப் பெட்டிக்குள் $118,000 ரொக்கம், $21,875 மதிப்புள்ள 350 கிராம் நகை ஆகியவை இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு ஆங் அறையை விட்டு வெளியேறினார். பின்னர் அவர்கள் நால்வரும் ஒரு வாடகை வாகனத்தில் அவ்விடத்தை விட்டு தப்பி சென்றனர்.
அவர்களில் பாபுல் இறங்கிய பிறகு மற்ற மூவரும் ஆங்கின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு இஸ்லாம், சொஃபியான் இருவரிடம் ஆங், அவர்களின் உதவிக்காக பணம் கொடுத்தார்.
திருடப்பட்ட நகையின் ஒரு பகுதியை $5,000க்கு அடகு வைத்த இஸ்லாம், அதை பங்ளா தேஷில் உள்ள தனது சகோதரருக்கு அனுப்பி வைத்தார்.
திருடப்பட்ட எல்லா நகைகளும் $88,770 ரொக்கம் ஆகியவை போலிசாரால் கைப்பற்றப்பட்டன என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.