போலி சிங்கப்பூர் கடப்பிதழ், அடையாள அட்டை தொடர்பில் இரு இலங்கை ஆடவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புஷ்பராஜ் கபில், வயது 21, ராமச்சந்திரன் கிரியசோ பிரஷாத், வயது 32, ஆகிய இருவருக்கும் முறையே ஏப்ரல் 28ஆம் தேதியும் ஜூன் 4ஆம் தேதியும் தலா எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
போலி சிங்கப்பூர் பாஸ்போர்ட், அடையாள அட்டை வைத்திருந்ததற்காக கபில் தண்டிக்கப்பட்டார். போலி ஆவணங்களைப் பெற கபிலுக்கு உதவிய பிரஷாத்துக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி இருவரும் சிங்கப்பூரில் நுழைய முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர்.
கனடாவுக்குள் அகதியாக நுழைய விரும்பிய கபில், சேம் என்பவரின் உதவியை நாடியுள்ளார். கனடா செல்வதற்கான ஆவணங்களைத் தயாரித்து கொடுத்தால் $9,000 தருவதாக சேமிடம் கபில் உறுதி கூறினார்.
உடனே சேம், பிரஷாத் என்பவருடன் தொடர்புகொண்டு கபிலின் பயணத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள மலேசியரான முகமட் என்பவரிடமிருந்து பிரஷாத் போலி ஆவணங்களைப் பெற்றார்.
பின்னர் பிப்ரவரி 28ஆம் தேதி கபிலும் பிரஷாத்தும் கோலாலம்பூரி லிருந்து சிங்கப்பூர் புறப்பட்டனர்.
அப்போது போலி ஆவணங்கள் உள்ள பையை கபிலிடம் பிரஷாத் ஒப்படைத்தார்.
மறுநாள் நாள் காலை 6.30 மணியளவில் இருவரும் துவாஸ் சோதனைச் சாவடியை வந்தடைந்தனர்.
குடிநுழைவுத்துறை அதிகாரியிடம் கபில் தனது இலங்கை பாஸ்போர்ட்டை காட்டினார். ஆனால் அவரது நடத்தையில் அதிகாரிக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் கபிலையும் அவருடன் வந்த பிரஷாத்தையும் மேலதிகாரியிடம் அனுப்பிவைத்தார்.
சோதனையில் அவர்களிடம் போலி சிங்கப்பூர் கடப்பிதழ், அடையாள அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.