கொரோனா கிருமிப்பரவல் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பிரச்சினையாக இருக்கும் என்றும் நீண்ட காலத்திற்கு இந்தப் பிரச்சினையுடன் வாழ சிங்கப்பூரர்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார். மக்களின் வேலை, விளையாட்டு மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பழகிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா கிருமிப்பரவலுக்குப் பிந்திய சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றிய ஆறு தேசிய ஒளிபரப்பு உரைகளில் முதலாவதாக இன்று மாலை ஒளியேறிய உரையில் "தடுப்பு மருந்துகள் பரவலாகத் தயாரிக்கப்படுவதற்கு ஓராண்டு அல்லது அதற்கு மேலும் ஆகலாம்," என்று திரு லீ தெரிவித்திருக்கிறார்.
"கடந்த காலத்தில் காசநோய் போன்ற அபாயகரமான தொற்று வியாதிகளின் பரவலைப் போல கொவிட்-19 உடனும் நாம் வாழப் பழகிக்கொள்ளவேண்டும்,"
இந்நோய்ப்பரவலை எதிர்கொள்வதில் சிங்கப்பூர் இதுவரை கண்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதமர் தமது உரையில் விளக்கினார்.
“அனைத்துலக வர்த்தகத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். பல தொழில்துறைகள் கொவிட்-19 கிருமித்தொற்று சூழலிலிருந்து முழுமையாக மீள முடியாமல் போகலாம். வேலைகள் பறிபோகும். அடுத்த சில ஆண்டுகள் நாம் அனைவருக்கும் இடையூறு மிகுந்ததாகவும் சிரமமாகவும் இருக்கும்,” என்றார் அவர்.
“ஆனால், இந்தப் பெரும் சவால்களுக்கு மத்தியிலும் நான் உங்களிடம் கூறுகிறேன். பயப்படாதீர்கள், மனம் தளராதீர்கள்,” என்று அவர் நம்பிக்கை ஊட்டினார்.
“கொவிட்-19 கிருமித்தொற்று ஒரு நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கும். எனவே சிங்கப்பூரர்கள் நீண்டகாலத்திற்கு அதனுடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்,” எனப் பிரதமர் லீ கூறினார்.
(முழு விவரங்கள், நாளைய அச்சுப்பிரதியில்...)