வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஹோம்ஸ்டே லாட்ஜ் என்ற விடுதியில் 5,000 ஊழியர்கள் தங்கி இருக்கிறார்கள். அங்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று அதிகம் பரவும் இடமாக வெளிநாட்டு ஊழியர் விடுதிகளே தொடர்ந்து இருந்து வருகின்றன. கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தி ஊழியர்களைக் காக்க அரசாங்கம் பலமுனை முயற்சிகளை முழுமூச்சாகத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
இந்தச் சூழலில், ஹோம்ஸ்டே விடுதியைச் சேர்ந்த ஊழியர்களான இரண்டு ராஜாக்கள் ஆபத்துகள் அதிகம் இருந்தாலும் அவற்றை எல்லாம் துச்சமென ஒதுக்கிவிட்டு அரசாங்கத்தின் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள்.
அந்த இரண்டு ராஜாக்களில் ராஜேந்திரன் ராஜா, 24, என்பவர் நான்காண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரை சக ஊழியர்கள் ராஜா என்று அழைக்கிறார்கள். உடல் முழுவதும் பாதுகாப்பு உடை அணிந்து, கையுறை அணிந்து, முகக்கவசத்துடன் வலம் வரும் இவரைப் பார்த்து அரசாங்கத்தின் அதிவேக ஆதரவு குழுவின் உறுப்பினர் என்று பலரும் கருதுவதுகூட உண்டு.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், வீவக புளோக்குகளில் குழாய்ப் பதிப்பு வேலை செய்து வருகிறார். கொவிட்-19 கட்டுப்பாடுகள் இரண்டு மாதத்திற்கு முன் நடப்புக்கு வந்ததிலிருந்து தன் விடுதியில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களின் விவரங்களை எல்லாம் குறித்துக் கொண்டு பதிவகத்திற்கும் பரிசோதனைகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்து வருகிறார் ராஜேந்திரன்.
"கொரோனா எதிர்ப்புப் போரில் நாடே களம் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் தேவைப்படுவோருக்கு நாம் உதவ வேண்டும். ஒன்றாகச் சேர்ந்து போராட வேண்டும். வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் ராஜா.
இவர் செய்யும் உதவிகளின் காரணமாக மருத்துவ ஊழியர்களின் பணிகள் மிகவும் சுலபமாக இருக்கின்றன. இந்தப் பணியில் வேலுசாமி முனியப்பராஜ், 34, என்பவருடன் சேர்ந்து ராஜேந்திரன் தொண்டாற்றி வருகிறார்.
வேலுசாமியை விடுதி ஊழியர்கள் ராஜ் என்று அழைக்கிறார்கள். இவர் 2011ல் சிங்கப்பூருக்கு வந்தார். அஞ்சல் மூலம் இந்தியப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பிஎச்டி படித்து வரும் ராஜ், பல்வேறு வழிகளில் சக ஊழியர்களுக்கு உதவி இருக்கிறார்.
அரசாங்க அறிவிப்புகளைச் செவிமடுத்து வாட்ஸ்அப் மூலம் அவற்றை ஊழியர்களுக்கு அனுப்பி சகஊழியர்களுக்குப் பல விளக்கங்களையும் அளித்து உதவி வருவதோடு இவர் கபசுரக் குடிநீரையும் தயாரித்து ஊழியர்களுக்கு கொடுத்துவருகிறார்.
கபசுர நீருக்குக் கிராக்கி கூடியிருக்கிறது. கிருமித்தொற்று ஊழியர்களுக்கு நாள்தோறும் இரண்டு தடவை இது கொடுக்கப்படுகிறது.
கபசுர நீர் கிடைப்பதால் ஊழியர்கள் சாங்கி போன்ற தற்காலிக இடங்களுக்குச் செல்ல விரும்பாமல் இங்கேயே தொடர்ந்து தங்கியிருக்கக்கூட விரும்புகிறார்கள் என்று ராஜ் கூறுகிறார்.
இந்த இரண்டு பேரும் அருமையான அர்ப்பணிப்புப் பணிகளை ஆற்றி வருகிறார்கள் என்று அந்த விடுதியில் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த ஸ்டாஃப் சார்ஜண்ட் சதீஷ்குமார், 33, கூறுகிறார்.
$400 கொடுத்த அனில்
இந்த ராஜாக்கள் அளவுக்கு உடலுழைப்புப் பணியில் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த முண்டலா அனில் குமார் என்ற 31 வயது வாகன ஓட்டுநர், தன் தெம்பனிஸ் விடுதியில் தொண்டு செய்ததன் மூலம் தான் ஈட்டிய $400 பணத்தை அப்படியே கொரோனா எதிர்ப்புப் போராட்டத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.
இவர் 12 ஆண்டு காலமாக இங்கு பணியாற்றி வருகிறார். இவர் செய்த இந்த நன்கொடையைக் கண்ட நல்ல உள்ளம் படைத்த ஒருவர், அந்தப் பணத்தை ஹைதராபாத்தில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கும்படி அனிலிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். அனில் பெயரில் வெளிநாட்டு ஊழியர் நிலையத்துக்கு அந்தக் கொடையாளர் $8,000 நன்கொடை வழங்க முடிவு செய்தார்.

