தேக்கா சந்தையில் கடந்த சனிக்கிழமை இறைச்சிக் கடைக்காரர் மீது மீன் வியாபாரம் செய்த பெண் காறி உமிழ்ந்தது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
நிஜாமுதீன் என்பவரின் இறைச்சிக் கடைக்குப் பின்புறம் வரிசை நீண்டபோது பிரச்சினை தொடங்கியது.
மீன் கடைக்குச் செல்லும் பாதையை அடைத்தவாறு அந்த வரிசை இருந்தது. சம்பவம் குறித்து ‘த நியூ பேப்பர்’ செய்தித்தாளிடம் பேசிய நிஜாமுதீன், 40, “காலியாக இருக்கும் கடையில் சில மீன்களை மட்டும் வியாபாரத்திற்கு வைத்திருந்த பெண்ணுக்கு வரிசை நீண்டிருந்தது பிடிக்கவில்லை.
“அந்தக் கடை அவருடையது அல்ல. வரிசையில் நின்றிருந்த ஒரு வாடிக்கையாளரிடம் காரசாரமாக விவாதித்த அவர் கொச்சையாகப் பேசினார். ஹாக்கியன் மொழியையும் சில தமிழ் வார்த்தைகளையும் அப்போது அவர் பயன்படுத்தினார்.
“பின்னர் எனது கடைக்கு வந்து என்னைத் தாக்கத் தொடங்கினார். அவரது அடியைத் தடுத்தபோது என் மீது காறி உமிழ்ந்தார். எனது இடது கன்னத்திலும் கையிலும் எச்சில் வழிந்தது,” என்று கூறினார்.
நிஜாமுதீனின் வயிற்றிலும் கைகளிலும் அந்த மீன் வியாபாரி தாக்கியது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகி இருந்தது.
காலை நேர வியாபாரம் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த வேளையில் பலரது முன்னிலையில் சம்பவம் நடைபெற்றது தமக்கு தர்மசங்கடத்தையும் வருத்தத்தையும் தந்ததாக நிஜாமுதீன் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக அருகருகே வியாபாரம் செய்பவர்களாக இருந்தபோதிலும் அந்தப் பெண் இப்படி நடந்துகொண்டது இதுவே முதல் முறை என்று கூறிய அவர் சம்பவம் குறித்து போலிசிடம் தெரிவித்ததோடு உடல்நிலையைப் பரிசோதித்துக்கொள்ள டான் டோக் செங் மருத்துவமனைக்குச் சென்றார். அதனைத் தொடர்ந்து போலிசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கொவிட்-19 கிருமிச் சம்பவம் பரவும் காலத்தில் தம் மீது எச்சில் உமிழ்ந்ததால் மிகவும் கவலையுற்றதாக நிஜாமுதீன் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online