எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதற்காக தொலைக்காட்சியில் கூடுதல் ஒளிபரப்பு நேரம் கிடைக்கும் என்று தேர்தல் துறையின் அறிவிப்பை இங்குள்ள எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
அதேவேளையில், தேர்தல் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில் பிரசாரம் செய்வது தொடர்பான விதிமுறைகள் இடம்பெறாதது குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
அப்படியென்றால், கொவிட்-19 நோய் பரவி வரும் தற்போதைய சூழலில் மக்களிடம் பிரசார செய்திகளைக் கொண்டுசேர்ப்பதற்கு குறைவான அவகாசமே வழங்கப்படும் என்று அவை கூறின.
எனினும், பிரசாரம் செய்வதற்கு தொலைக்காட்சியில் கூடுதல் ஒளிபரப்பு நேரம் கிடைக்கவிருப்பதால், வாக்காளர்களிடம் சிறந்த முறையில் பிரசாரத்தைச் செயல்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
தேர்தல் துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டிகளைத் தான் ஆராய்ந்து வருவதாக பாட்டாளிக் கட்சி சொன்னது.
தொலைக்காட்சியில் கூடுதல் ஒளிபரப்பு நேரம் எப்படி கணக்கிடப்படும் என்பது குறித்த மேல் விவரங்களை வழங்குமாறு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 நிலவரத்தால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலின் காரணமாக, அரசியல் கட்சிகள் பிரதான ஊடகங்கள் வாயிலாக குறைந்த செலவில் பிரசாரத்தை மேற்கொள்ள முடியும் என்று சிங்கப்பூர் மக்கள் கட்சித் தலைவர் ஜோசெ ரேமண்ட் கருத்துரைத்து உள்ளார்.
எது எப்படி இருந்தாலும், பிரசாரம் குறித்த விதிமுறைகளைத் தேர்தல் துறை கூடிய விரைவில் வழங்குவது நல்லது என மக்களின் குரல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் தியன் சொன்னார்.

