இன்ஸ்டகிராமில் "மற்றவர்களின் இன உணர்வுகளை காயப்படுத்தும்" இனரீதியான அவதூறுகளையும் மோசமான வாரத்தைகளையும் வேண்டுமென்றே பதிவிட்ட சிங்கப்பூர் மாதும் அவரது மகனும் விசாரிக்கப்படுவதாக போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
ஜூன் 3ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்டகிராம் நேரலையின்போது 53 வயதான அம்மாதும் அவரது 19 வயது மகனும் இனரீதியான ஓர் அவதூறு சொல்லை பலமுறை கூறியுள்ளனர். அதனை ஏறக்குறைய 60 பார்வையாளர்கள் பார்த்தனர்.
2016ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய வேறொரு காணொளியில் அவர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதைத் தற்காக்கும் நோக்கில் அந்த நேரலை இடம்பெற்றதாக அறியப்படுகிறது.
இனத்தாக்குதல் செய்வதாக பார்வையாளர்கள் அவர்களைக் குறைகூறி, தங்களது அதிருப்தியைத் தெரிவித்தபோதும், "இது ஒரு சாதாரணமாக ஒரு பேச்சின் முறை" என தாயும் மகனும் தங்களை நியாயப்படுத்த முயற்சிப்பதை அது காட்டியது.
ஜூன் 3 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை இருவருக்கும் எதிராக பொதுமக்கள் செய்த புகார்களைத் தொடர்ந்து அவர்கள் விசாரிக்கப் படுவதாக போலிஸ் தெரிவித்துள்ளது.
"சிங்கப்பூரில் இன அல்லது சமய நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் செயல்களை காவல்துறை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது.
"வெவ்வேறு இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் தவறான எண்ணத்தையும் விரோதத்தையும் ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை தெரிவிக்கும் எவர் ஒருவர் மீதும் உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று போலிஸ் கூறியது.
அந்தச் சம்பவம் தொடர்பான காணொளி, டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதுடன், பலர் இருவரையும் விழிப்புணர்வுக்காக தங்களது நிகழ்ச்சிகளுக்கு அழைத்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் மூன்றாண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

