தனியார் வீடு விற்பனை கூடியது; வாடகை சரிந்தது

தனியார் வீடு விற்பனை கூடியது; வாடகை சரிந்தது

2 mins read
4c1e43bd-3dfa-4124-a888-b322ec58abb5
-

கொவிட்-19 நெருக்கடி காலகட்டமாக இருந்தபோதிலும் புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டுள்ள தனியார் வீடுகளின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மட்டும் 484 தனியார் வீடுகள் விற்கப்பட்டுள்ளதாக 'நைட் பிராங் சிங்கப்பூர்' சொத்து நிறுவனம் நேற்று தெரிவித்தது. ஏப்ரல் மாதத்தில் விற்கப்பட்ட 277 வீடுகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 75 விழுக்காடு அதிகம்.

ஏப்ரல் 7 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் 967 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.

அவற்றில் 577 புதிய வீடுகளும் 380 மறுவிற்பனை வீடுகளும் பரிவர்த்தனை ஆகியுள்ளன. எஞ்சியுள்ள 10 வீடுகள் முன்னதாக வாங்கியவர்களால் மற்றவர்களுக்கு விற்கப்பட்டன.

கொவிட்-19 பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளால் வீடு விற்பனைக் காட்சிக்கூடங்களுக்கு சென்று வீட்டின் வடிவமைப்பை நேரடியாகப் பார்க்க முடியாத நிலையிலும் அதிக வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த சொத்து நிறுவனம் தெரிவித்தது.

கொவிட்-19 நெருக்கடி நிலைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் வேளையில், வீவக, கொண்டோமினிய வீடுகளை வாடகைக்கு எடுப்போர் எண்ணிக்கை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வாடகைக் கட்டணம் குறைந்து வருவது தொடரக்கூடும் என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்து நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் 2,881 தனியார் அடுக்குமாடி வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இது ஏப்ரல் மாத எண்ணிக்கையான 2,853 வீடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு விழுக்காடு அதிகம். ஆனால், வீவக வீடுகள் வாடகைக்கு எடுக்கப்படுவது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 45.1 விழுக்காடு சரிந்துள்ளது.

தனியார் அடுக்குமாடி வீடுகள், வீவக வீடுகளுக்கான வாடகைக் கட்டணம் மே மாதத்தில் முறையே 1.4%, 1.3% சரிந்துள்ளது. இது மேலும் சரியக்கூடும் என்றும் எஸ்ஆர்எக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.