உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கிருமித்தொற்று நெருக்கடி நிலையில் பாதுகாப்பான இடங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கிருமித்தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் சிறந்த முறையில் கட்டுப்பாட்டுத் தளர்வை சிங்கப்பூர் கையாண்டுள்ளதை அந்த ஆய்வறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது. ஹாங்காங்கை தலைமையகமாகக்கொண்ட முதலீட்டு நிறுவனமான டீப் நாலெஜ் குருப் இந்த ஆய்வை மேற்கொண்டது.
மொத்தம் 200 நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தும் திறன், நோய்த்தொற்று பரவல் குறித்த கண்காணிப்பு, தடங்களறிதல் மற்றும் அவசரநிலைமைக்கு ஆயத்தமாக இருத்தல் போன்ற அம்சங்களுடனான 11,400 தரவுகள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூர் அரசாங்கம் கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 1ஆம் தேதி வரை தொற்று முறியடிப்புக்கான நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியது.
அதுபோன்ற நடவடிக்கைகள் இப்போது சில பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு வழிவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் சிங்கப்பூர் இதே நான்காவது இடத்தைத்தான் பிடித்திருந்தது. அந்த சமயத்தில்தான் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளானது தெரியவந்தது.
கிருமித்தொற்று நெருக்கடியால் கடும் வீழ்ச்சி கண்டுள்ள பொருளியலை சரிசெய்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பான இடங்களின் தரவரிசைப்பட்டியலில் சுவிட்சர்லாந்து 752 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த நாட்டில் கொவிட்-19 நெருக்கடியைக் கையாண்ட விதமும் சிகிச்சை அளிக்கப்பட்ட விதமும் அங்குள்ள சுகாதாரத் துறைக்கு அதிகமான சுமையைத் தரவில்லை. அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இறங்குமுகமாக இருந்தது. அத்துடன் கிருமித்தொற்று நெருக்கடிக்குப் பின்னர் பொருளியலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே அந்த நாட்டை பாதுகாப்பானதாக்க வழி செய்துள்ளது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது இடத்தில் ஜெர்மனியும் மூன்றாவதாக இஸ்ரேலும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு 58வது இடமும் பிரிட்டனுக்கு 68வது இடமும் கிடைத்துள்ளன.
தைவானுக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. இங்கு கடந்த ஒரு வாரமாக கிருமித்தொற்றுச் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை. மேலும் சில நாடுகளில் முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் கிருமித்தொற்று இரண்டாவது முறை பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

