துன்புறுத்தல், பெண் போலிஸ் அதிகாரி ஒருவரின் கையில் கீறி, காயம் விளைவித்தது, கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்திற்கு இணங்காதது எனத் தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் கஸ்தூரி கோவிந்தசாமி ரத்தினசாமி, 40. கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சன் பிளாசா கடைத்தொகுதிக்குச் சென்றிருந்த கஸ்தூரி, முகக்கவசம் அணிய மறுத்ததோடு, குறைந்தது இரு ஆடவரை திட்டிய காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்நிலையில், தனக்கு வெஞ்சினம், பல்வகை ஆளுமை போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும் தனக்கு உதவுமாறும் காணொளி வழியாக இன்று நீதிமன்ற விசாரணையில் முன்னிலையானபோது அவர் கூறினார். இதையடுத்து, அவர் மனநலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெறும் விதமாக கட்டாய சிகிச்சை ஆணை பிறப்பிக்கப்படலாம் என்று மாவட்ட நீதிபதி பதிலளித்தார்.
இதையடுத்து, வேலையின்றி இருக்கும் கஸ்தூரி தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். சம்பவ நாளன்று நண்பகல் நேரத்தில் சன் பிளாசாவுக்குச் சென்ற கஸ்தூரி, முகக்கவசத்தை அணியாமல் அதைக் கையில் வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. அதை முகத்தில் அணியச் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். மாறாக, ஆண் ஊழியர் ஒருவரையும் பாதுகாவல் அதிகாரி ஒருவரையும் அவர் தகாத சொற்களால் பழித்தார்.
பின்னர் மே 7ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் அங்கு சென்றார் கஸ்தூரி. அவரது வருகையைப் பதிவுசெய்வதற்காக அடையாள அட்டையைக் கேட்ட போது, அதை மேசைமீது வீசியதாகவும் அங்கிருந்த ஆண் ஊழியரை இழிவாகப் பேசியதாகவும் கூறப்பட்டது. பின் மூன்றாம் தளத்தில் பாதுகாவல் மேற்பார்வையாளர் ஒருவரையும் அவர் திட்டியதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் அங்கு வந்த போலிசார் அவரைக் கைது செய்ய முயல, அதற்கு உடன்பட மறுத்த போது போலிஸ் அதிகாரி ஒருவரின் கையில் கீறிவிட்டார். இதனால் அந்த அதிகாரி பலதுறை மருந்தகத்திற்குச் சென்று சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.
இம்மாதம் 26ஆம் தேதி கஸ்தூரிக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.