சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று 40,000ஐ நெருங்கிவிட்டது

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று 40,000ஐ நெருங்கிவிட்டது

2 mins read
562d3fc9-7485-45ed-895e-ac60284ee1f9
அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், மரினா பே வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள வட்டாரப் பரிசோதனை நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 463 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களையும் சேர்த்து, இங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 39,850ஐ எட்டியுள்ளது.

சமூக அளவில் நேற்று 18 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் எண்மர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்.

எஞ்சிய 10 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அவர்களில் ஐவர், முன்னதாக கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவர்கள். அந்த ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக அமைச்சு கூறியது.

அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணிபுரிவோர், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வேலை செய்வோர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் ஐந்து பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட எஞ்சிய எட்டு பேருக்குக் கிருமி எவ்வாறு தொற்றியது என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் அல்லாது மற்ற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களைச் சமூக அளவில் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் சுகாதார அமைச்சு கடந்த மாதம் 20ஆம் தேதி சேர்த்ததைத் தொடர்ந்து, ஒரே நாளில் சமூக அளவில் இத்தனை பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

கடைசியாக ஏப்ரல் 24ஆம் தேதிதான், நேற்று பதிவான எண்ணிக்கையைவிட அதிகமானோருக்கு சமூக அளவில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அன்று சமூக அளவில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என அமைச்சு கூறியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட 422 கிருமித்தொற்று சம்பவங்கள் குறித்த மேல் விவரங்களை அமைச்சு அன்றிரவு வெளியிட்டது.

சமூக அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட ஐவரில் நால்வரிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவில்லை.

அவர்களிடம் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அந்த நால்வரில் இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். எஞ்சிய இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

அந்த நால்வரும் அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணிபுரிபவர்கள் அல்லது முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

நேற்று முன்தினம் சமூக அளவில் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஐந்தாமவர் 78 வயது சிங்கப்பூர் ஆடவர்.

இம்மாதம் 4ஆம் தேதி கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன. முந்தைய சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.