சிங்கப்பூரில் பணியாற்றும் கப்பல்துறை சிப்பந்திகளைப் பணியில் மாற்றிவிடுவதற்கு இரண்டாவது தனி விமானச் சேவைக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கடல்துறை, துறைமுக ஆணையம், போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் சிவில் விமானத்துறை ஆணையம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், கப்பல் நிறுவனங்கள் ஆகியவை சிப்பந்திகளை மாற்றிவிடுவதற்கு இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தன.
இந்தியாவின் மும்பை நகரிலிருந்து விமானப் பயணம் மேற்கொண்டு இங்கு வந்துள்ள 54 கப்பல்துறை சிப்பந்திகள், சிங்கப்பூர் துறைமுகத்தில் உள்ள ஆறு கப்பல்களில் பணியாற்ற இருக்கின்றனர்.
அதேவேளையில், இங்கு பணியாற்றி வந்த 87 சிப்பந்திகள் அதே விமானத்தில் மும்பை சென்றுள்ளனர்.
கொவிட்-19 நோய் பரவல் சூழலில் கப்பல்துறையில் பணியாற்றும் சிப்பந்திகளைப் பாதுகாப்பான முறையில் பணியில் மாற்றிவிடுவதற்கு இத்தகைய தனி விமானச் சேவைகள் வகை செய்கின்றன.
சிப்பந்திகளைப் பணியில் மாற்றிவிடுவதற்கு வகை செய்யும் இதுபோன்ற மேலும் இரு தனி விமானச் சேவைகள் இந்த வாரம் வழங்கப்படவுள்ளன.
"சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இந்திய சிப்பந்திகளைச் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் இந்தத் திட்டத்தை மேற்கொண்டதில் எக்சிகியூட்டிவ் ஷிப் மேனேஜ்மண்ட் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி.
"அதே நேரத்தில் சிங்கப்பூர் துறைமுகத்தில் பணியாற்றுவதற்கு கப்பல்துறை சிப்பந்திகளை இங்கு வரவழைப்பதற்கு விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று எக்சிகியூட்டிவ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பி.எஸ்.டீக்கா கூறினார்.
கொவிட்-19 சூழலில், கடந்த மார்ச் 27ஆம் தேதி முதல் இதுவரை 4,000க்கும் அதிகமான கப்பல்துறை சிப்பந்திகளைப் பணியில் மாற்றிவிடுவதற்கு கடல்துறை, துறைமுக ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எண்ணெய்க் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்றனர்.

