கடந்த ஏப்ரல் மாதத்தில் 'வெஸ்ட்லைட் தோ குவான்' வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் இருந்த திரு த.ரஞ்ஜித்துக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவசர மருத்துவ வண்டியில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். கொவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு அந்நோய் தொற்றியிருப்பது அந்நாளிலேயே தெரியவந்தது.
"நோய் தொற்றிவிட்டதே என்ற சோகம் ஒருபுறம், என் வீட்டில் உள்ளவர்கள் கவலைப்படுவார்களோ என்ற வேதனை மறுபுறம். எனது 2 வயது குழந்தையை வளர்த்துவரும் மனைவிடமும் இதை சொல்லவில்லை," என்று தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில் திரு ரஞ்ஜித் தெரிவித்தார்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனையில்தான் ரஞ்ஜித் குளிரூட்டிச் சாதனத்தைப் பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபடுகிறார். பழக்கமான இடம் என்பதால் மனதிற்கு ஆறுதல் தந்தது.
தொடர் சிகிச்சை பெறுவதற்காக இவர் மவுண்ட் எலிசபத் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்தார். அந்த நோயாளி அறையில் இருவர் இருந்தனர். தினசரி மருத்துவ சோதனைகள், மருந்து, உணவு ஆகிய தேவைகள் நேரத்துடன் பூர்த்திசெய்யப்பட, தரமான மருத்துவ சேவையில் குணமடைந்து கடந்த மாதம் 23ஆம் தேதி 'வெஸ்ட்லைட் தோ குவான்' தங்கும் விடுதிக்கு மீண்டும் திரும்பினார் 41 வயது திரு ரஞ்ஜித். திரு ரஞ்ஜித் போல அதே தங்கும் விடுதியில் இருக்கும் குளிரூட்டிச் சாதனத் தொழில்நுட்ப ரான கு.தினேஷ் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானார். தமது தங்கும் விடுதி தனிமை வட்டாரமாக அறிவிக்கப்பட்ட இரண்டாவது வாரத்தில் சளி, அதிக உடல் வெப்பநிலை ஆகிய அறிகுறிகள் இந்த 27 வயது இளையரிடம் தென்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதியிலிருந்த மருத்துவரைப் பார்த்தார். அவரது ஆலோசனைப்படி கொவிட்-19 சோதனைக்கும் சென்றார். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
"எதை சாப்பிட்டாலும் என்னால் அதன் சுவையை உணர முடியாதது கிருமித்தொற்று சோதனைக்குச் செல்லத் தூண்டியது,'' என்றார் திரு தினேஷ். சுமார் 40 நாட்களாக தொடர் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் எக்ஸ்போவில் தங்கியிருந்தார். மருந்துகளை முறையாக உட்கொண்டு வர, உடல் வெப்பநிலை வழக்கத்திற்கு திரும்பி, அவரால் நாவில் சுவைத்தன்மையை உணர முடிந்தது.
பிறகு அங்கிருந்து அவர் தஞ்சோங் பகார் முனையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தங்கும் வசதிக்கு மாற்றப்பட்டார். அங்கு 10 நாட்கள் இருந்து, குணமடைந்து மீண்டும் அவரது தங்கும் விடுதிக்கு இம்மாதம் தினேஷ் திரும்பினார்.
"நோய் தொற்றியபோது பயம் வந்தது. ஏனெனில் அடுத்தது என்ன செய்வார்கள், எங்கு போக வேண்டுமோ என்ற ஐயங்கள் இருந்தன. சிங்கப்பூர் எக்ஸ்போவில் மற்ற ஊழியர்களைச் சந்தித்ததும் பயம் தனிந்தது. அங்கு இருந்தபோது கூட்டு உடற்பயிற்சி, வரைவதற்கான 'ஸ்கெச்' புத்தகங்கள் ஆகிய நடவடிக்கைகளை எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்," என்றார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு தினேஷ்.
தங்களை நன்றாகக் கவனித் துக்கொண்ட சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறிய திரு ரஞ்ஜித்தும் திரு தினேஷும் கூடிய விரைவில் வேலைக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

