மனிதவள அமைச்சு: முன்பதிவு செய்த பின்னரே பணம் அனுப்ப முடியும்

மனிதவள அமைச்சு: முன்பதிவு செய்த பின்னரே பணம் அனுப்ப முடியும்

2 mins read
bad53c2d-df6e-435e-aa56-3ac8761a0fb0
அவெரி லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குமிடத்தில் ஊருக்குப் பணம் அனுப்பும் சேவையைப் பெறுவதற்காக வரிசை பிடித்து நிற்கின்றனர் இந்த ஊழியர்கள். படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

வெளிநாட்டுக்குப் பணம் அனுப்ப விரும்பும் வெளிநாட்டு பணிப்பெண்களும் மற்றவர்களும் தொலைபேசி அல்லது இணையத்தில் பணம் அனுப்பும் அமைப்புகளுடன் முதலில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இப்புதிய விதி குறித்து முதலாளிகள் தங்களின் பணிப்பெண்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு நேற்று அறிவுறுத்தியது.

"வீட்டை விட்டு வெளியேறி பணம் அனுப்புவதற்கான பிரபல இடங்களுக்குச் செல்லும் முன் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டும்," என்று அந்த அறிவுறுத்தல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளிநாட்டுக்குப் பணம் அனுப்பும் சேவைக்காக பெரிதும் நாடப்படும் சிட்டி பிளாசா, லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா போன்ற இடங்களில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் தங்கள் நண்பர்களுடன் கூடினர்.

கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ள தற்போதைய முதல் கட்டத்தின்போது வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் தொடர்ந்து தங்களின் ஓய்வு நாட்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு நேற்று கூறியது.

உணவு வாங்கவும் முக்கியமான பணிகளைச் செய்யவும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறலாம். ஆனால் அவர்களின் நண்பர்களைச் சந்திப்பது அல்லது பொது இடங்களில் கூடுவது போன்றவற்றிற்கு அனுமதி இல்லை என்று கூறப் படுகிறது.

வெளியே செய்ய வேண்டிய முக்கியமான பணிகளை முடித்தவுடன் அவர்கள் உடனே வீடு திரும்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு செய்வது சமூகத்தில் உள்ள மற்றவர்களின் செயல்பாட்டுடன் ஒத்துப்போகும் என்றும் அமைச்சு சுட்டியது.

ஜூன் 1 முதல் சிங்கப்பூர் அதன் கிருமி முறியடிப்புத் திட்டத்திலிருந்து வெளியேறியது. பொருளியல் சார்ந்த வர்த்தகங்களும் மூன்று கட்டங்களாகத் திறக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டத்தின்கீழ் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவதும் குறிப்பிட்ட சில வர்த்தகங்களும் சேவைகளும் இயங்குவதும் அடங்கும்.

இரண்டாம் கட்டத்தில் சில்லறை வர்த்தகக் கடைகள், வாடிக்கையாளர் சேவைகள், விளையாட்டு வசதிகள் போன்றவை திறக்கப்படும். உட்கார்ந்து சாப்பிடுவது மற்றும் நண்பர்களைச் சந்திப்பது போன்ற நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கும்.

இந்த இரண்டாம் கட்டம் ஜூன் இறுதிக்கு முன்னரே தொடங்கிவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சமூகத்தில் ஏற்படும் கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தை ஒட்டி இக்கட்டம் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.

இதற்கிடையே பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும் தூதர்கள் தொடர்ந்து இந்த வார இறுதியில் தங்களின் பணியில் ஈடுபடுவர் என்றும் மனிதவள அமைச்சின் அறிவுறுத்தலைப் பின்பற்றாதோருக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்தது.