சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியரும் தொற்றுநோய்த் துறை வல்லுநருமான பால் தம்பையா, 2022ல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரில் செயல்படும் அனைத்துலக தொற்றுநோய்ச் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கவிருக்கிறார்.
பேராசிரியர் தம்பையா இப்போது அந்தச் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக நியமனம் பெற்று இருக்கிறார்.
சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கும் வரை, அதன் இப்போதைய தலைவரான பேராசிரியர் அலிசன் ஹோல்ஸ்க்கு ஆதரவாக இருந்து பேராசிரியர் தம்பையா உதவி வருவார்.
அனைத்துலக தொற்றுநோய்ச் சங்கம் 1986ல் அமைக்கப்பட்டது.
155க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 90,000 பேருக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அந்தச் சங்கத்தின் தலைமை பொறுப்பேற்கும் முதல் சிங்கப்பூரர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
தம்முடைய நியமனம் பற்றி கருத்து தெரிவித்த பேராசிரியர் தம்பையா, சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளர்களும் மருந்தகத் துறையினரும் பொதுச் சுகாதாரப் பட்டத் தொழிலர்களும் இத்தகைய சங்கத்தைச் சேர்ந்த அமைப்புகளுக்கு உதவி செய்து ஒவ்வொருவருக்கும் இந்த உலகை நலமிக்க ஒன்றாக ஆக்க பெரும் தொண்டாற்ற முடியும் எனக் கூறினார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online