சிங்கப்பூர் தேர்தல் துறை நேற்று அறிவித்த புதிய விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் தினத்தன்றும் வாக்களிப்பு தினத்தன்றும் பெருங்கூட்டம் கூடுவதற்கு அனுமதி கிடையாது.
பொதுவாக, வேட்புமனு தாக்கல் தினத்தன்று அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வேட்புமனு தாக்கல் நிலையங்களில் கூடுவதும் அதன் அருகில் உள்ள இடங்களில் கூடுவதும் வழக்கம். ஆனால், இந்தத் தேர்தலில் இவை அனுமதிக்கப்பட மாட்டாது.
வேட்பாளர்கள், அவர்களை முன்மொழிவோர், வழிமொழிவோர், ஆதரிப்போர், அங்கீகாரம் பெற்ற செய்தியாளர்கள் ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் தொடர்பான நடவடிக்கைகள் தொலைக்காட்சியிலும் இதர இணைய ஒளிவழிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நேரடி தேர்தல் பிரசாரமும் வாக்களிப்பு முடிந்து தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆதரவாளர்கள் ஒன்றுகூடும் இடங்களில் காத்திருப்பதும்கூட அனுமதிக்கப்பட மாட்டாது என்று தேர்தல் துறை தெரிவித்தது.
வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தலாம். பொதுவாக ஒலிபெருக்கிகள் பொறுத்தப்பட்ட லாரிகள் அல்லது இதர வாகனங்களில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஒலிக்கச் செய்யலாம்.
ஆனால், வாகனங்களிலிருந்து வேட்பாளர்கள் பேசவோ, இசையை, காணொளியை நேரடியாக ஒலி/ஒளிபரப்பு செய்யவோ கூடாது.
முன்பு இடம்பெற்ற வாக்களிப்பு தினத்துக்குப் பிந்திய நன்றி கூறும் ஊர்வலம், தேர்தல் பிரசாரத்துக்கு முக்கியமானதாகக் கருதப்படவில்லையாதலால், அதுவும் இம்முறை அனுமதிக்கப்படாது.
வேட்பாளர்களின் தொகுதிச் சுற்றுலாவும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதும் அனுமதிக்கப்பட்டாலும் ஒரு குழுவில் ஐவருக்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேறொரு குழுவுக்கு மாறக்கூடாது. அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
ஒரு குழுவுக்கும் மற்ற குழுக்களுக்கும் இடையே ஒரு மீட்டர் தூர இடைவெளி இருக்க வேண்டும். நெருங்கிய தொடர்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கைகுலுக்குதல் கூடாது என்றும் புதிய விதி முறை கூறுகிறது.
தங்களின் மின்-பிரசாரத்துக்கு அரசாங்க இடங்களைப் பயன்படுத்த விரும்பும் அரசியல் கட்சிகள் அவற்றைக் கழிவுக் கட்டணத்தில் பெறலாம். அதற்காக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கு அவர்களுக்கான இணைய வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
சுவரொட்டிகள், பதாகைகள், தேர்தல் செலவு, பிரசாரமற்ற நாள் போன்ற இதர தேர்தல் தொடர்பான அம்சங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு வாக்காளருக்கு அதிகபட்சம் நான்கு வெள்ளியை வேட்பாளர் ஒருவர் செலவழிக்கலாம். இதில் எந்த மாற்றமும் இல்லை. 2011 பொதுத் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு $3.50 என்றிருந்த தேர்தல் செலவு 2015 பொதுத் தேர்தலின்போது $4 ஆக அதிகரிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளும் பதாகைகளும் பயன்படுத்தப்படலாம்.விதியை மீறி பயன்படுத்தப்படும் சுவரொட்டிகளும் பதாகைகளும் தேர்தல் அதிகாரி அல்லது அவர் நியமித்த அதிகாரிகளால் அகற்றப்படும்.
அவ்வாறு அகற்றப்படும் ஒவ்வொரு சுவரொட்டிக்கும் பதாகைக்கும் $50 வசூலிக்கப்படும். அது வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும் என்றும் நேற்று விவரிக்கப்பட்டது.