கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்புத் திட்டம் ஏப்ரல் மாதம் நடப்புக்கு வந்ததிலிருந்து லிட்டில் இந்தியா பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.
அரசாங்கம் அறிவித்த முதல் கட்டத் தளர்வில் அங்கு இயங்கும் பெரும்பாலான சில்லறை வர்த்தகக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்க, நேற்றைய இரண்டாம் கட்டத் தளர்வில் அவை நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திறந்தன.
இது அங்கு இயங்கும் கடைக்காரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வரவேற்கத்தக்க மாற்றமாக விளங்கியது.
தமிழ் முரசு செய்திக் குழு நேற்று பிற்பகல் லிட்டில் இந்தியாவுக்கு சென்றிருந்தபோது, வழக்கமான மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.
அப்போது, குறிப்பாக தேக்கா சந்தையில், அக்கம்பக்க அலுவலக ஊழியர்கள் பலரும் உணவு உண்பதற்காக வந்திருந்தனர்.
நகைக்கடைகள், அழகு நிலையங்கள், மளிகைப் பொருள் கடைகள், பூக்கடைகள், பாரம்பரிய உடை கடைகள், உணவகங்கள் என எல்லா கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
இவற்றில் பெரும்பாலான கடைகளில் 'சேஃப்என்ட்ரி' எனும் மின்னிலக்க வருகை பதிவு நடைமுறையில் இருந்தது. சில கடைகளுக்குள் நுழைவதற்கு முன், உடல் வெப்பநிலையும் சோதிக்கப்பட்டது. ஒரு சில நகைக்கடைகளும் அழகு நிலையங்களும் வாடிக்கையாளர்களுக்கு 'பிளாஸ்டிக்' கையுறைகளை வழங்கின.
"பெரும்பாலானோர் நேரடியாகக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்க விரும்புவர். குறிப்பாக ஆடைகளை வாங்கும்போது அதனைத் தொட்டுப்பார்த்து, அணிந்து பார்க்கும் வசதி இணையம் வழி வாங்கும்போது கிடைக்காது. இச்சமயம் கடைக்கு செல்ல முடிவதில் மனதிலிருந்த பாரம் குறைகிறது. பிறரை இங்கு சந்திப்பதிலும் மகிழ்ச்சி," என்று கூறினார் மளிகைப் பொருட்களை வாங்கிச் சென்ற இல்லத்தரசியான திருமதி வசந்தி மாறன், 54.
இதுவரை வழக்கமாக வரும் 40 விழுக்காட்டு வாடிக்கையாளர்கள் தமது கடைக்கு பூக்கள் வாங்க வந்திருப்பதாகவும் இனி வரும் நாட்களில் கடை திறந்திருக்கும் என்ற தகவல் அறிந்து வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் கடைக்குத் திரும்புவார்கள் என்று தாம் நம்புவதாக பஃப்ளோ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கவிதா புஷ்பக் கடையின் ஊழியர் திரு ம.மணிகண்டன், 27 கூறினார்.
"கடைக்காரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீண்டும் வியாபாரத்தை தொடங்க ஆவலுடன் காத்திருந்தனர். கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு அம்சங்களைக் கடையில் நடைமுறைப்படுத்துவதன் தொடர்பில் கூடுதல் செலவும் அவர்களுக்கு உண்டு.
"வாடிக்கையாளர்கள் தங்கள் பங்கிற்கு கடைகளில் ஒரு மீட்டர் தூர இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று தெரிவித்தார் 'லிஷா' எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா.

