எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் எந்த ஒரு தொகுதியிலும் மும்முனை போட்டியைத் தவிர்ப்பதுதான் தங்கள் விருப்பம் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் மற்ற கட்சிகள் எங்கு போட்டியிடலாம் என்று கூறுவதற்கு எந்தவொரு கட்சிக்கும் உரிமை இல்லை என்றும் அவர் கூறினார்.
"நீங்கள் இங்கே போட்டியிடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எங்களுக்கு எதிராக நாங்கள் நிற்கும் தொகுதியில் எந்தக் கட்சியாவது போட்டியிட விரும்பினால், நாம் அவர்களை தடுக்க முடியாது," என்று டாக்டர் டான் நேற்றுக் காலை அங் மோ கியோ அவென்யூ 4ல் உள்ள மேஃபிளவர் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் காலை உணவு உட்கொண்டபோது, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்யாளரிடம் தெரிவித்தார்.
மக்கள் சக்தி கட்சி, சீர்திருத்தக் கட்சி, சிங்கப்பூரர்களுக்கு முதன்மை கட்சி, ஜனநாயக முன்னேற்றக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் ஓர் எதிர்த்தரப்புக் கூட்டணி அமைக்க பரிசிலீக்கும் வேளையில், அதற்குள்ளேயே ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.
உதாரணத்துக்கு, வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் போட்டியிட சீர்திருத்தக் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் விருப்பம் தெரிவித்துள்ளன.
அதேபோல், கெபுன் பாரு தனித்தொகுதியிலும் மேரிமவுண்ட் தனித்தொகுதியிலும் போட்டியிட ஜனநாயக முன்னேற்றக் கட்சியும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியும் விரும்புகின்றன.
"சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஒரு புதிய கட்சி என்பதால் இதர கட்சிகளுடன் போட்டி என்று வரும்போது, அதில் விட்டுக்கொடுக்காது. முன்னைய தேர்தலில் ஒரு கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட்டதாலேயே அதே தொகுதியில் நாங்கள்தான் போட்டியிடுவோம், மற்றவர்கள் அங்கு நிற்கக்கூடாது என்று அந்தக் கட்சியினர் கூறுவது சரியல்ல என்று கருதுகிறேன்," என்றார் டாக்டர் டான்.
"உத்தேச எதிர்த்தரப்புக் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என்பதால் சிங்கப்பூர் முன்னற்றக் கட்சிக்கு எதிராக மற்ற எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடிய வாய்ப்புண்டு," என்று மக்கள் சக்தி கட்சியின் தலைமைச் செயலாளர் திரு கோ மெங் செங் கடந்த புதன்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார்.

