சிங்கப்பூரில் ஜூன் 2ஆம் தேதி பொருளியல் கட்டுப்பாடுகளில் ஒரு பகுதி தளர்த்தப்பட்ட பிறகு பொதுப் போக்குவரத்தில் பயணிகள் எண்ணிக்கை கூடியது.
குறிப்பாக காலை உச்ச நேரத்தில் ரயில், பேருந்துகளில் அதிகமானோர் பயணம் செய்ததைக் காண முடிந்தது. இந்நிலையில், நேற்று முதல் இரண்டாம் கட்ட தளர்வு நடப்புக்கு வந்துள்ளது.
பொருளியலில் மேலும் பல அங்கங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ரயில், பேருந்துகளில் இன்னும் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில்கொண்டு பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் கிருமித்தொற்றைத் தவிர்த்துக்கொள்வதற்காக பல ஏற்பாடுகளை மிகவும் தீவிரமாக, முழுமையாக எடுத்து வருகின்றன.
பாதுகாப்பான இடைவெளி, பாதுகாப்பாக ரயில், பேருந்தில் ஏறிச் செல்லும் முறை ஆகியவற்றைப் பின்பற்றும்படி பயணிகளுக்கு எம்ஆர்டி ரயில் நிலையங்களில் போக்குவரத்துத் தூதுவர்கள் ஊக்கமூட்டுவார்கள்.
பயணிகள் முகக்கவசம் அணிந்து இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள். மக்கள் அதிகமாக தொட்டு பயன்படுத்தக்கூடிய பயண அட்டை பணம் நிரப்பும் சாதனம், மின்படிக்கட்டுகள், மின்தூக்கி பொத்தான்கள் ஆகியவை ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு தடவை கிருமிநாசினி அடித்து சுத்தம் செய்யப்படும்.
ரயில் நிலையங்களில் கைகழுவும் திரவம் இருக்கும். பேருந்துகளிலும் ரயில்களிலும் கிருமிநாசினி பூச்சுமருந்து அடிக்கப்படும். சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கும்படி இடைவிடாமல் பயணிகளுக்கு அறிவிப்பு மூலம் நினைவுபடுத்தப்படும்.
பயணம் செய்யும்போது கைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவர்.
ரயில்பெட்டிகள் நண்பகல் நேரத்திலும் முற்றிலும் சுத்தப்படுத்தப்படும். போக்குவரத்துத் தூதுவர்கள் ரயில் நிலையங்களில் இருந்து சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கும்படி பயணிகளுக்கு ஊக்கமூட்டி வருவார்கள்.
இரவு நேரத்திலும் ரயில் வண்டிகள் சுத்தப்படுத்தப்படும்.
பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் உள்ள மேசைகள், பேருந்து இருக்கைகள் எல்லாம் 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை கிருமிநாசினி கொண்டு சுத்தப் படுத்தப்படும். ஒரு நாளில் நான்கு தடவை கழிவறைகள் மருந்து அடித்துச் சுத்தப்படுத்தப்படும்.
பேருந்தின் உட்புறம் நாள் ஒன்றுக்கு இரண்டு தடவை மருந்தடித்துச் சுத்தப்படுத்தப்படும். பேருந்து இருக்கைகள், கைப்பிடிகள், ஓட்டுநர் இடம் எல்லாம் மருந்தடித்து துணியால் சுத்தமாகத் துடைக்கப்படும்.
இரவு நேரத்தில் பேருந்துகள் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் கழுவி சுத்தப்படுத்தப்படும். பேருந்து ஓட்டுநர்கள் பணி தொடங்கும்போதும் மதிய சாப்பாட்டிற்குப் பிறகு பணிக்கு வரும்போதும் உடல் வெப்பநிலையைச் சரிபார்க்க வேண்டும்.

