சிங்கப்பூர் மக்கள் கட்சியின் நிறுவனரும் எதிர்த்தரப்பின் பழுத்த அரசியல் அனுபவசாலியுமான திரு சியாம் சீ தோங் தமது கட்சியின் வேட்பாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்தாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் திரு ஸ்டீவ் சியா தெரிவித்துள்ளார்.
"திரு சியாம் வயது முதிர்வு காரணமாக நலிவுற்று காணப்படுகிறார். அவரால் இனிமேல் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது," என்று திரு சியா நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். மேலும், இன்றுக் காலை பீஷானில் தொகுதிச் சுற்றுலா சென்ற அக்கட்சி, பீஷான்- தோ பாயோ குழுத் தொகுதியில் வேட்பாளர்களாக நிறுத்தப்படும் நால்வரின் பெயர்களை அறிவித்தது.
திரு ஒஸ்மான் சுலைமான், திரு மெல்வின் சியூ, கட்சியின் துணைத் தலைவர் திரு வில்லியம்சன் லீ ஆகியோருடன் திரு ஸ்டீவ் சியா அக்குழுவுக்குத் தலைமை தாங்குவார்.
பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் கடந்த இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட திரு சியாமின் துணைவியாரான 71 வயது திருமதி லீனா சியாமும் இந்தத் தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்ற மாட்டார் என்றும் திரு சியா தெரிவித்தார்.
"திருமதி சியாம் தமது கணவரைப் பார்த்துக்கொள்கிறார். இந்த கொவிட்-19 நிலவரத்தில் அவர் வெளியே வந்து மக்களைச் சந்திப்பது அவரது சுகாதாரத்துக்கு ஏதுவாக இருக்காது," என்றும் திரு சியா கூறினார்.
பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில், சிங்கப்பூர் மக்கள் கட்சி அதன் தலைவரான திரு ஜோசே ரேமண்டை வேட்பாளராக நிறுத்தவுள்ளது. "ஒரு நல்ல வேட்பாளர் குழுவை அமைக்க நாங்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். அக்குழு சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் முழு மனதாக உழைக்கும். இந்தப் பொதுத் தேர்தலில் நாங்கள் முன்னர் ஏழு வேட்பாளர்களை நிறுத்துவதாக இருந்தது. ஆனால் பின்னர் அதை ஐந்தாகக் குறைத்துக்கொண்டோம். மற்ற எதிர்க்கட்சி களுடன் பேசி இந்த இரு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவது என்று முடிவெடுத்தோம்," என்றார் திரு சியா. அக்கட்சி முன்பு மவுண்ட்பேட்டன், மேரிமவுண்ட் தனித்தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தது.

