எதிர்வரும் பொதுத் தேர்தலில் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாராகி வருகிறார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான். அவர் நேற்றுக் காலை புக்கிட் பாத்தோக் வெஸ்ட் சந்தையில் பொதுமக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தார். டாக்டர் சீயுடன் இருந்த சக கட்சி உறுப்பினர்கள் அவரது முகம் அச்சிடப்பட்ட டி-சட்டைகளை அணிந்திருந்தனர். அதில் 'புக்கிட் பாத்தோக்கிற்கு சீ சூன் ஜுவான்' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
ஃபேஸ்புக்கில் தம் ஆதரவாளர்களுடன் நேரலையில் பேசிய டாக்டர் சீ, ''நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அடுத்த மூன்று வாரங்களுக்கு புக்கிட் பாத்தோக் என் மலர்ந்த முகத்தைப் பார்க்கப் போகிறது,'' என்று கூறினார்.
புக்கிட் பாத்தோக் தொகுதிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலின்போது டாக்டர் சீ, மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளரான திரு முரளி பிள்ளையை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார். அப்போது டாக்டர் சீ 38.8% வாக்குகளைப் பெற்றார்.
புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் வாக்களிக்கக் கூடிய மொத்த குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 29,950ஆக இருந்தது என தேர்தல் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரம் நாளை மறுநாள் புதன்கிழமை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சி, ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியிலும் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியிலும் புக்கிட் பாத்தோக், யூஹுவா, புக்கிட் பாஞ்சாங் ஆகிய தனித் தொகுதிகளிலும் போட்டியிடும் என நம்பப்படுகிறது.

