வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உறுதிசெய்யப்படும்

2 mins read
241de44d-fb06-417f-81f9-6b5feb1f6613
-

நிறுவனங்களின் சார்பாக வேலைக்கு ஆளெடுக்கும்போது வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசீலிப்பதை உறுதிசெய்வதற்கு ஏதுவாக புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

வேலைவாய்ப்பு நிறுவனங்கள் உரிமம் பெற, இவ்வாண்டு அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்தும் அந்த விதிமுறைகளையும் வேறு புதிய நிபந்தனைகளையும் நிறைவுசெய்ய வேண்டும் என்று அமைச்சு ஓர் அறிக்கை மூலமாக நேற்று தெரிவித்தது. சிறந்த ஆளெடுப்பு நடைமுறைகளைக் கொண்டுள்ள வேலைவாய்ப்பு நிறுவனங்கள் 'பணியமர்த்தும் பங்காளிகளாக' தேர்வுசெய்யப்படும். இதன்மூலம் 'எஸ்ஜி ஒற்றுமை வேலைகள், திறன்கள் தொகுப்பின்'கீழ் உள்ளூர்வாசிகள் வேலைகளையும் வேலைப் பயிற்சிகளையும் பெற அந்த நிறுவனங்கள் உதவ முடியும்.

கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக வேலைச் சந்தையில் மிகக் கடினமான சூழல் நிலவும் வேளையில், சிங்கப்பூரர்களுக்கான வேலை வாய்ப்புகளை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கேதுவாக, இந்தப் புதிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. இப்போது, பத்தில் மூன்று காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் நிரப்பப்படுவதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. புதிய விதிகளின்படி, வேலைவாய்ப்பு நிறுவனங்கள் நியாயமான வேலை நியமன நடைமுறைகளுக்கான முத்தரப்பு வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இணங்க வேண்டும். அத்துடன், நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களுக்கு சிங்கப்பூரர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் நியாயமான நடவடிக்கைகளை அவை மேற்கொள்ள வேண்டும்.

அந்த நிறுவனங்கள் தகுதி அடிப்படையில் அனைத்து விண்ணப்பதாரர்களையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வயது, இனம், குடியுரிமை, சமயம், திருமண நிலை, குடும்பப் பொறுப்புகள், பாலினம், உடற்குறை போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது. உரிம நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்கத் தவறும் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்குத் தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்படலாம் என்றும் அவற்றின் உரிமம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் அல்லது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கலாம் என்றும் அமைச்சு எச்சரித்து இருக்கிறது.

வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பாரபட்சத்துடன் கூடிய வேலை விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி, கடந்த மூன்றாண்டுகளில் ஆண்டிற்குக் கிட்டத்தட்ட 20 புகார்கள் வந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. அந்தப் புகார்களை விசாரித்த பிறகு, கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என அமைச்சு கண்டறிந்தது. நிறுவனங்களில் சிங்கப்பூரர்களை மையமாகக் கொண்ட ஊழியரணியை அமைப்பதற்குத் தொடர்ந்து உதவி வரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களை அங்கீகரித்து, அவற்றுக்கு 'மனித மூலதனப் பங்காளித்துவ குறியீட்டை' அமைச்சு வழங்கும்.