இந்தப் பொதுத் தேர்தலில் நிற்கும் வேட்பாளருக்கான வைப்புத்தொகை $13,500 என்று தேர்தல் துறை அறிவித்துள்ளது. அது 2015 பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் செலுத்திய வைப்புத் தொகையைவிட $1,000 குறைவு.
இந்தத் தகவலுடன் பொதுத் தேர்தல் தொடர்பான மற்ற தகவல்களும் நேற்று வெளியிடப்பட்டன.
2018ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்படி, பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முன்பு செலுத்திய $14,500 தொகையைக் காட்டிலும் குறைவான தொகையைச் செலுத்துவார் என்றும் அவர் மின்னியல் முறையில் அந்தத் தொகையைச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் நிற்கும் வேட்பாளரின் வைப்புத்தொகை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதாந்திர படித்தொகையைப் (அலவன்ஸ்) பொறுத்து முடிவெடுக்கப்படும்.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முந்தைய மாதம் அவர் எவ்வளவு படித்தொகையைப் பெற்றோரோ அதை அருகில் உள்ள $500க்குக் கொண்டு போய், அதை தேர்தலின் வேட்பாளர் வைப்புத்தொகையாக அறிவிக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய மாதாந்திர படித்தொகை $13,750. ஆக, தேர்தல் வேட்பாளர் வைப்புத்தொகை $13,500 ஆக உறுதி செய்யப்பட்டது.
கொவிட்-19 நிலவரத்தால் வேட்பாளர்கள் தேர்தல் துறையின் மின்னிலக்கச் சேவையைப் பயன்படுத்தி வேட்புமனு தாக்கல் படிவத்துக்குத் தேவையானவற்றைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் படிவங்கள் வேட்புமனு தாக்கல் தினத்தில் தேர்தல் அதிகாரியிடம் முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வேட்பாளர் ஒருவர், தம்மை முன்மொழிபவர், வழிமொழிபவர், தாம் போட்டியிடும் தொகுதியில் வசிக்கும் குறைந்தது நான்கு ஆதரவாளர்களுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வேட்பாளரும் அரசியல் நன்கொடைச் சான்றிதழுக்கு அரசியல் நன்கொடை பதிவாளரிடம் இம்மாதம் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குழுத் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் ஒருவர் மலாய் சமூகக் குழு அல்லது இதர சிறுபான்மை சமூகங்கள் குழுவிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கொவிட்-19 காரணமாக வீட்டில் இருக்கும் உத்தரவு அல்லது தனிமைப்படுத்தும் உத்தரவால் அல்லது உடல்நலமில்லாத காரணத்தால் நேரடியாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத வேட்பாளர் தமது பிரதிநிதியாக இன்னொருவரை அனுப்பலாம்.அந்தப் பிரிதிநிதி தம்முடன் வேட்பாளரின் அனுமதி பெற்ற உரிமைப் பத்திரத்தைக் கொண்டு வரவேண்டும்.

