வானொலி, தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரசாரம்

வானொலி, தொலைக்காட்சிகளில் தேர்தல் பிரசாரம்

2 mins read
dcf13e65-1f19-487c-9d1a-8e9c7079672c
-

இந்தப் பொதுத்தேர்தலில் தேர்தல் பிரசாரங்களை மக்கள் தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் கேட்கலாம், காணலாம்.

ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை அன்றாடம் இரவு ஏழு மணிக்கு தொகுதிகளின் அடிப்படையிலான பிரசாரங்கள் இடம்பெறும்.

அத்துடன், கட்சிகள் அடிப்படையிலான இரு பிரசார உரைகள் ஜூலை 2ஆம் தேதியன்றும் பிரசார ஓய்வு நாளான ஜூலை 9ஆம் தேதியன்றும் ஒளியேறும்.

பிரசார ஓய்வுநாளன்று பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அன்று அனுமதிக்கப்படும் சில விதிவிலக்குகளில் இந்த ஒளிபரப்பும் ஒன்று.

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில், இவ்வாண்டின் பொதுத்தேர்தலில் பொதுக் கூட்டங்கள், பேரணி உரைகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் இணையமும் ஊடகங்களுமே வேட்பாளர்களின் பிரசாரக் களங்களாக உள்ளன.

எனவே, வேட்பாளர்கள் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக தொலைக்காட்சி ஒளிபரப்புகளுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யதுள்ளது.

தொகுதி அடிப்படையிலான ஒளிபரப்புகளில் தனித்தொகுதி வேட்பாளருக்கு மூன்று நிமிடங்கள் அளிக்கப்படும்.

குழுத்தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, 12 முதல் 15 நிமிடங்கள் வரை கொடுக்கப்படும்.

இந்த ஒளிபரப்புகளுக்கான ஒளிப்பதிவு ஜூலை 2ஆம் தேதி முதல் தொடங்கும். ஆங்கிலம், தமிழ், மாண்டரின், மலாய் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளில் வேட்பாளர்கள் பேசலாம் என்று தேர்தல் துறை நேற்று தெரிவித்தது.

தொகுதி பிரசாரங்கள் ஜூலை 3ஆம் தேதி முதல் மீடியாகார்ப் ஒளிவழி ஐந்தில் ஒளியேறும்.

பிரசாரக் கூட்டங்களின்போது சில நேரங்களில் வேட்பாளர்கள் சீனக் கிளைமொழிகளில் பேசுவர். எனினும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கிளைமொழிகளில் பேச அனுமதியில்லை.

குறைந்தது ஆறு வேட்பாளர்களைத் தேர்தல் களத்தில் நிறுத்தும் கட்சிகளுக்கே, கட்சி அடிப்படையிலான தொலைக்காட்சி பிரசாரத்திற்கு நேரம் ஒதுக்கப்படும். 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

தகுதிபெறும் கட்சிகள், அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் போன்ற விவரங்கள் வேட்பு மனுத்தாக்கல் அன்று தெரிவிக்கப்படும் என்று தேர்தல் துறை தெரிவித்தது.

கட்சி பிரசாரங்களும் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் மட்டுமே இடம்பெறலாம்.

இந்த ஒளிபரப்புகள் 19 தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் வானொலி ஒலிவழிகளிலும் ஜூலை 2ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு இடம்பெறும்.

இந்த உரைகளில் அவதூறோ, குற்றத்தன்மை வாய்ந்த கருத்துகளோ இடம்பெறக்கூடாது என்று தேர்தல் துறை நினைவூட்டியது.

இந்த ஒளிபரப்புகளுடன் சம்பந்தப்பட்ட வழிமுறைகளை தொடர்பு, தகவல் மேம்பாட்டு ஆணையம் வரும் வியாழக்கிழமைக்குள் வெளியிடும்.