கட்சி வெளியிட்ட காணொளியில் ஐந்து புதுமுகங்கள்
எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி நேற்று ஒரு காணொளியை இணையத்தில் வெளியிட்டது. பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கும் வாய்ப்புள்ள 12 பேர் அந்தக் காணொளியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.
‘மேக் யுவர் வோட் கவுன்ட்’ என்னும் தலைப்பிலான அந்த ஆறு நிமிட காணொளியில் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினர்களான சில்வியா லிம், பிரித்தம் சிங் ஆகியோருடன் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள் டென்னிஸ் டான், லியோன் பெரேரா போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.
கட்சியின் முன்னைய தலைமைச் செயலாளரான லோ தியா கியாங்கின் முகம் காணப்பட்ட போதிலும் அவர் எதுவும் பேசவில்லை. தமது வீட்டில் கீழே விழுந்ததால் காயமுற்ற அவர் கூ தெக் புவாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பி உள்ளார். காணொளியில் காணப்பட்ட மற்ற உறுப்பினர்கள் கடந்த சில ஆண்டுகளாக கட்சியுடன் சேர்ந்து ஆற்றிய பணிகள் குறித்து ஒருசில வார்த்தைகள் பேசினர்.
முன்னாள் பொங்கோல் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் லீ லி லியன், 41, 2015 பொதுத் தேர்தலில் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிட்ட அணியைச் சேர்ந்த செரில் லோ, கென்னத் ஃபூ, 43, ஆகியோரும் காணொளியில் இடம்பெற்று உள்ளனர்.
இப்பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இவர்கள் பெறக்கூடும். ஐந்து புதுமுகங்களும் இந்த காணொளியில் காணப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான ரீசா கான், 27, என்பவர் 2017 அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய ஃபாரிட் கானின் மகள் ஆவார். ஜேமுஸ் லிம், 44, வழக்கறிஞர் ஃபாட்லி ஃபாஸி, விளம்பர நிர்வாகி நிக்கோல் சீ, 33, சுற்றுச்
சூழல் நிபுணர் யுதிஷ்த்ரா நாதன் ஆகியோர் மற்றவர்கள். இவர்களில் நிக்கோல் சீ, 2011 பொதுத் தேர்தலில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் வேட்பாளராகக் களம் கண்டவர். இந்த ஐவரும் பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர்கள் என முறைப்படி அறிவிக்கப்படாவிட்டாலும் கட்சியின் பல நடவடிக்கைகளில் கலந்துகொண்டவர்கள்.
காணொளியை வெளியிடும் முன் நேற்று முன்தினம் மாலை 15 விநாடிகள் ஓடக்கூடிய விளம்பர படச்சுருள் ஒன்றை சமூக ஊடகங்களில் அக்கட்சி பதிவேற்றியது.