வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் மும்முனைப் போட்டியைத் தவிர்க்கும் நோக்கில் சீர்திருத்தக் கட்சி அங்கு போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தெரிவித்து உள்ளார்.
அந்தக் குழுத் தொகுதியில் ஏற்கெனவே மக்கள் செயல் கட்சியை எதிர்த்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சிமுக) போட்டியிடுவதால் நேரடிப் போட்டிக்கு வழிவிட தமது கட்சி முடிவெடுத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை இரவு அவர் தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
முன்னதாக, போட்டியிலிருந்து விலகுவது குறித்து சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக், உதவி தலைமைச் செயலாளர் லியோங் முன் வேய் ஆகியோருடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் திரு கென்னத் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் அவை ஒவ்வொன்றும் போட்டியிடும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
“சிமுக தலைவர்களுடன் பேசிய விவரத்தை நான் வெளியிட விரும்பவில்லை. இருப்பினும் திட்டமிட்டதைக் காட்டிலும் அந்தக் கட்சி குறைவான இடங்களிலேயே போட்டியிட உள்ளது.
“மும்முனைப் போட்டியைத் தவிர்ப்பதற்காக பல தொகுதிகளில் போட்டியிடும் திட்டத்தை அது மீட்டுக்கொண்டுள்ளது.
“அதற்குக் கைமாறாக நாங்களும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியை விட்டுக்கொடுத்து உள்ளோம்,” என்று திரு கென்னத் குறிப்பிட்டுள்ளார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியுடன் தமது கட்சிக்கு உணர்வுபூர்வமான தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தத் தொகுதியிலிருந்து வெளியேறும் அதே சமயம் அங் மோ கியோ குழுத் தொகுதியிலும் இயோ சூ காங், ராடின் மாஸ் ஆகிய இரு தனித் தொகுதிகளிலும் சீர்திருத்தக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடும் என்றும் திரு கென்னத் கூறியுள்ளார்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி யில் சீர்திருத்தக் கட்சி 2011, 2015 ஆகிய இரு தேர்தல்களில் களமிறங் கினாலும் வெற்றி வாய்ப்பை அக் கட்சியால் பெற இயலவில்லை.