பாசிர் ரிஸ் டிரைவ் 8, பாசிர் ரிஸ் டிரைவ் 1 சந்திப்பில் இன்று (ஜூன் 25) நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த 57 வயது பெண் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நான்கு கார்கள், ஒரு டாக்சி, ஒரு மோட்டார்சைக்கிள், ஒரு லாரி ஆகிய 7 வாகனங்கள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றுக்கு காலை 11.25 மணிக்குத் தகவல் கிடைத்தது.
கார் ஒன்றுடன் மோதியதில் குப்புறக் கவிழ்ந்த மற்றொரு காருக்குள் அதன் ஓட்டுநரான அந்தப் பெண் சிக்கியிருந்ததாக ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.
குப்புறக் கவிழ்ந்திருந்த காருக்குள்ளிருந்த அந்தப் பெண்ணை மூன்று வாகனமோட்டிகள் வெளியே இழுத்தனர். சுய நினைவுடன் இருந்த அந்தப் பெண், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆம்புலன்ஸ் மூலம் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
போலிஸ் விசாரணை தொடர்கிறது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online


