ஜூலை 1ஆம் தேதி முதல், 13 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது உடையவர்களுக்கு தீவிர மூச்சுப் பிரச்சினை இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் நேற்று பேசிய அவர், கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைவதாகக் கூறினார்.
“சிங்கப்பூர் பொருளியல் நடவடிக்கைகள் கட்டங்கட்டமாக தொடங்கும் வேளையில், கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாவதைத் தவிர்க்க, துரிதமாகச் செயல்பட்டு கிருமி தொற்றியோரை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்,” என்று அவர் சொன்னார்.
தற்போது, தீவிர மூச்சுப் பிரச்சினை இருப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கும் 45 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுஉடையவர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்யவிருக்கும் அரசியல் கட்சி வேட்பாளர்களைக் கிருமித்தொற்று பரிசோதனை செய்வதற்கான தேவை தற்போது இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைப் பிரிவு இயக்குநரான இணைப் பேராசிரியர் கென்னத் மாக் கூறினார்.
எனினும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி கட்சி வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் நோய்ப் பரவல் எச்சரிக்கை நிலையைக் (டோர்ஸ்கான்) குறைப்பதற்கான திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்பதை இணைப் பேராசிரியர் மாக் தெளிவுபடுத்தினார்.
“இப்போது நிலவரம் மேம்பட்டுள்ளது. இருந்தாலும், டோர்ஸ்கான் நிலையைக் குறைப்பதற்கு முன்பாக நிலவரத்தைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்க விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
டோர்ஸ்கான் எச்சரிக்கை நிலை குறைக்கப்பட்டால் பொதுமக்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடும் என அதிகாரிகள் எண்ணுவதாகக் கூறிய அவர், இது குறித்து இப்போதைக்கு எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது என்றார்.
“டோர்ஸ்கான் நிலையைக் குறைப்பது இப்போது முக்கியம் அல்ல. நாம் தொடர்ந்து கவனத்துடன் இருப்பதே முக்கியம்,” என்றார் அவர்.
கிருமித்தொற்று பரிசோதனையை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, கிருமிப் பரவலை எதிர்கொள்ள சுகாதாரப் பராமரிப்புக் கழகங்களுக்கு பல மானியங்களை அதிகாரிகள் வழங்குவர் என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக, 900க்கும் அதிகமான பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் மானியமாக $10,000 கொடுக்கப்படும்.
பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களில் பணிபுரியும் மருத்துவர்களைக் கிருமி தொற்றி, அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அந்த மருந்தகங்களுக்கு ‘நம்பிக்கை மானியம்’ வழங்கப்படும்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் குணமடையும் வரை அல்லது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலம் முடிவடையும் வரை, தகுதிபெறும் மருந்தகங்களுக்கு நாள் ஒன்றுக்கு $500 வழங்கப்படும்.
இதைக் கொண்டு மாற்று மருத்துவர் ஒருவரை மருந்தகங்கள் தற்காலிகமாக பணியமர்த்தலாம்.
“கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் பொது மருத்துவர்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் உதவும் என நம்புகிறோம்.
“நம்மையும் மற்றவர்களையும் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் நமது பங்கையாற்ற வேண்டும். நாம் அனைவரும் தொடர்ந்து சமூகப் பொறுப்புடன் செயல்பட்டு, விழிப்புடன் இருப்போம்,” என்று அமைச்சர் கான் கேட்டுக்கொண்டார்.