கொரோனா கிருமித்தொற்று நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே இருவிதமான சிறப்புப் பயண ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.
இதன் மூலம் இருநாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவினர் எல்லை தாண்டி பயணம் செய்ய முடியும் என்று வெளியுறவு அமைச்சு நேற்று அறிவித்தது.
சிறப்புப் பயண ஏற்பாடுகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினும் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் கலந்துரையாடி இணக்கம் கண்டனர்.
நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் சிறப்புப் பயண ஏற்பாடுகளில் ஒன்று தடையற்ற இருவழி
பயணப்பாதையாகும்.
அதிகாரபூர்வப் பயணங்கள், அத்தியாவசிய வர்த்தகங்கள் ஆகியவற்றுக்காக இந்தப் பயணப் பாதை பயன்படுத்தப்படும்.
இந்தப் பயணப் பாதை மூலம் பயணம் செய்பவர்கள் கொரோனா கிருமித்தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொது சுகாதார நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட வேண்டும்.
இதுதொடர்பான விவரங்கள் குறித்து சிங்கப்பூரும் மலேசியாவும் கலந்துரையாடி வருகின்றன.
பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளும் இணக்கம் காண வேண்டும்.
நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் மற்றொரு பயண ஏற்பாடு, குறிப்பிட்ட காலத்துக்குப் பயணம் செய்யும் முறை என அழைக்கப்
படுகிறது.
நீண்டகால குடிநுழைவு அட்டை வைத்திருக்கும் சிங்கப்பூரர்களும் மலேசியர்களும் வர்த்தகத்துக்காகவும் பணி நிமித்தமாகவும் இருவழி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
வேலை செய்யும் நாட்டில் குறைந்தது தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இருந்த பிறகு குறுகியகால விடுப்புக்காக அவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியும். குறுகியகால விடுப்பு முடிந்த பிறகு, அவர்கள் வேலை செய்யும் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
இருநாடுகளுக்கும் இடையே பயணம் செய்துவந்த சிங்கப்பூரரர்கள், மலேசியர்கள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது என்று திரு முகைதீனிடம் பிரதமர் லீ உறுதி அளித்தார்.
இருநாடுகளுக்கிடையிலான சிறப்புப் பயண ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பொது சுகாதார நடவடிக்கைகளில் இருநாடுகளும் இணக்கம் காண வேண்டும் என்று இருநாட்டுத் தலைவர்களும் தெரிவித்தனர்.
இருநாடுகளிலும் உள்ள மருத்துவ வளங்களைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூரர்கள், மலேசியர்கள் ஆகியோரின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் பேணிக் காக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தடையற்ற இருவழி பயணப்பாதை, குறிப்பிட்ட காலத்துக்குப் பயணம் செய்யும் முறை ஆகிய இரண்டு சிறப்புப் பயண ஏற்பாடுகள் குறித்த நடைமுறை விவரங்கள் தொடர்பாக இருநாடுகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.