வரும் தேர்தலில் மார்சிலிங்- இயூ டீ குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி அணி தொடர்ந்து தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தலைமையில் களம் இறங்கும். தேசிய வளர்ச்சி மற்றும் மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, நாடாளுமுன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம், புதுமுகம் ஹானி சோ ஆகியோர் அமைச்சர் தலைமையிலான குழுவில் இடம்பெற்று இருக்கும் மற்ற வேட்பாளர்கள்.
இரண்டு தவணை நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி இருக்கும் ஓங் டெங் கூன் இந்தத் தேர்தலில் போட்டியிடமாட்டார். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று தன் தொகுதியைச் சேர்ந்த மார்சிலிங் பகுதிக்குச் சுற்றுலா சென்றார்.
அப்போது அவர் தன் வேட்பாளர் குழு பற்றி அறிவித்தார். முன்பு 2015ல் நடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் மக்கள் செயல் கட்சி 68.7% வாக்குகளைப் பெற்று வென்றது. அப்போதைய மசெக வேட்பாளர்களில் அதிபர் ஹலிமா யாக்கோப்பும் இடம்பெற்று இருந்தார். சிங்கப்பூர் ஜன நாயகக் கட்சியை வீழ்த்தி மசெக பெரும் வெற்றி பெற்றது.
"இந்தக் குடியிருப்புப் பேட்டைக்கும் நகருக்கும் முழு குழுத் தொகுதிக்கும் உரிய திட்டங்களை நாங்கள் வகுத்து உள்ளோம். அவற்றை வரும் நாட்களில் அறிமுகப்படுத்துவோம்," என்று திரு வோங் குறிப்பிட்டார். "நம் வாழ்வையும் வேலைகளையும் எதிர்காலத்தையும் கட்டிக்காக்கும் வகையில் ஒன்றாகச் சேர்ந்து நாம் பாடுபடுவதற்குத் தோதாக உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடுகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஸாக்கி முகம்மது, 45, அண்மையில் மார்சிலிங் தொகுதிக்குரிய ஐந்து ஆண்டு திட்டம் ஒன்றைத் தொடங்கினார்.
திரு யாம், 39, மூன்றாவது தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிடுகிறார். இவர் மசெக தலைமையகத்தில் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். திருவாட்டி ஹானி சோ, 33, திரு ஓங்கிற்குப் பதிலாக களம் காண்கிறார். வெற்றி பெற்றதும் இவர் உட்குரோவ் பகுதியைப் பிரதிநிதிப்பார்.

