கொவிட்-19 நெருக்கடிகளால் மூடப்பட்ட இந்திய மரபுடைமை நிலையம் நாளை (ஜூலை 3) முதல் பார்வையாளர்களை அனுமதிக்க உள்ளது.
அங்கு வரும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் அது தெரிவித்துள்ளது.
கேம்பல் லேனில் இருக்கும் இந்திய மரபுடைமை நிலையத்துக்குச் செல்ல விரும்புவோர், அது திறந்திருக்கும் நேரம் பற்றிய விவரங்களை தொலைபேசி வழியாகவோ அல்லது இணையம் வழியாகவோ தெரிந்துகொண்டு செல்லலாம்.
நிலையத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிந்திருக்குமாறு பார்வையாளர்களை நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல, உடல்நலக் குறைவு இருந்தால் அங்கு வருவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை வைத்துள்ளது நிலையம்.
நிலையத்துக்கு வருவோரின் வருகை பதிவு செய்யப்படுவதுடன், அவர்களது உடல் வெப்பநிலையும் அளவிடப்படும்.
ஒரே வீட்டில் வசிக்காதவர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், தேவைப்படும்போது, காட்சிக் கூடத்தில் இருக்கும் கிருமிநாசினியைப் பயன்படுத்துமாறு பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
நிலையத்தில் இருக்கும்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக நிலைய ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
பார்வையாளர்கள் மற்றும் நிலைய ஊழியர்களின் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.