சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தில் வெவ்வேறு காலங்களில் செயலவை உறுப்பினராகவும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் மதிக்கத்தக்க தலைவராகவும் செயல்பட்ட திரு எஸ். வீராசாமி நேற்று (ஜூலை 4) காலமானார். அவருக்கு வயது 81.
“சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தில் முக்கிய தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த திரு வீராசாமி, ஆசிரியர்களின் நலனுக்காகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டவர்.
“பதவி ஓய்வு பெற்ற பிறகும் சங்கத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றினார். அப்போதும் செயலவை வழிகாட்டியாகவும் செயல்பட்டார்,” என்று கருத்துரைத்தார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தற்போதைய தலைவரான 73 வயது திரு சி. சாமிக்கண்ணு.
மேலும் சிங்கப்பூரில் 1995, 1997 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்மொழி வார ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகராகவும் இருந்து அவ்விழாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் திரு வீராசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
திரு வீராசாமியின் நல்லுடலுக்கு இன்று தமிழாசிரியர்கள் திரண்டு வந்து இறுதியஞ்சலி செலுத்தினர். இன்று மாலை மண்டாய் தகனச்சாலையில் அன்னாரின் நல்லுடன் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.