போலிசுக்குச் சொந்தமான இரண்டு ஐ-பேட் கைக்கணினிகளைக் களவாடி அவற்றை அடகு வைத்த பெண் போலிஸ் ஹேமாவதி குணசேகரனுக்கு ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் சார்ஜண்ட் நிலையில் இருந்த ஹேமாவதி, சிங்கப்பூர் போலிஸ் படையில் 2005ஆம் ஆண்டில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகள் கழித்து அவர், மரினா பே அக்கம்பக்க போலிஸ் நிலையத்தில் பணியில் அமர்த்தப்பட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான சிங்கப்பூரின் சமூக பதில் நடவடிக்கையான எஸ்ஜி செக்கியூர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வீடு வீடாகச் செல்வது ஹேமாவதியின் பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது. இதற்காக அவர் அந்த ஐ பேடுகளைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக அரசுதரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹேமாவதிக்கு அந்த இரண்டு ஐ பேட் கைகணினிகள் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு மாதத்திற்குப் பிறகு ஹேமாவதி அவற்றைக் களவாடி ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்திலுள்ள கைபேசிக் கடையில் அடகு வைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓராண்டுக்குப் பிறகு போலிசாரிடம் புகார் செய்யப்பட்டது.