கொரோனா கிருமிப்பரவலால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த விலங்கியல் தோட்டத்திற்கு இன்று கிட்டத்தட்ட 2,000 பேர் வருகை அளித்தனர். ஜூரோங் பறவைப்பூங்கா, ரிவர் சஃபாரி ஆகிய இடங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்களை வரவேற்கத் தொடங்கின.
நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் தொடங்கியது முதல் வெறிச்சோடிக் காணப்பட்ட இந்த இடங்கள், இளையர் தினமான இன்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்களின் வருகையால், கலகலப்புடன் காணப்பபட்டன. ஆயினும், இந்த மூன்று இடங்களில் அனுமதிக்கப்படும் வருகையாளர் எண்ணிக்கையில் கால் பங்கினர்தான் வருகையாளர்கள் (அதாவது 1,000 முதல் 2,250 வருகையாளர்கள் வரை) தற்போது அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் வருகையாளர்கள் இணையத்தில் முன்பதிவு செய்த பிறகுதான் வரவேண்டும்.
எத்தனை வருகையாளர்கள் வந்துள்ளனர் என்பதை மதிப்பிட்டுக் கண்காணித்துவரும் தொழில்நுட்பம் ஒன்றும் பயன்படுத்தப்படுவதாகச் சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் பேச்சாளர் இன்று தெரிவித்தார். கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த 'டிராம்' (tram) சவாரிகள், விலங்கு சாகச நிகழ்ச்சிகள், சிறார்களுக்கான நீர்விளையாட்டு இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.