'இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை'

'இன, சமய விவாதங்களில் மிகுந்த கவனம் தேவை'

2 mins read
15bef048-1e18-47b9-b947-1e7172e5cf24
கோப்புப்படம் -

இனம், சமயம் சார்ந்த பிரச்சினைகள் உணர்வைத் தூண்டக்கூடிய ஒன்று. எனவே அவை குறித்த விவாதங்களை கவனத்துடன் மேற்கொள்ளுமாறு பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவற்றை மிகக் கவனமாக, இளையர்களுக்கும் மூத்த தலைமுறையினருக்கும் இடையே கருத்திணக்கம் ஏற்படுமாறு செய்ய வேண்டும் என்று இணையம் வழி நடந்த மசெகவின் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் லீ நேற்று முன்தினம் கூறினார்.

இளைஞர்கள், இந்த விவகாரத்தில் மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர். அவை ஏற்புடைய கருத்துகள். மேலும் அவர்கள்தான் சிங்கப்பூரின் வாரிசுகள் என்பதால் அவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ஆனால் அதே நேரத்தில், இதுபோன்ற முக்கியமான விஷயங்கள் "பெரும் வெறுப்பை" ஏற்படுத்தக்கூடும், எனவே அதை நேர்த்தியாக கையாள வேண்டும் என்றார் அவர்.

"உண்மையில், இப்போது நாம் இனம், சமயம் பற்றிய விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறோம். அதாவது, தேசிய அடையாளத்துடன் ஒருவரின், இன, சமய அடையாளங்கள் என்று வரும்போது ஏதேனும் விட்டுக்கொடுக்க வேண்டுமா எனப் பேசுகிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பேசுவதற்கு மிகவும் சங்கடமாக இருந்த விஷயங்கள் இவை. நாம் முன்னோக்கி செல்லும்போது இத்தகைய விவாதங்களை அதிகமாக நடத்த முடியும்," என்று திருகூறினார்.

செங்காங் குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர் செல்வி ரைசா கான் (26) குறித்த கேள்விக்கு பிரதமர் லீ பதிலளித்தார்.

அவருக்கு எதிராக வார இறுதியில் இரண்டு புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக போலிசார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் அவர் கூறிய கருத்துக்கள் "சமயம் அல்லது இனம் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை" ஏற்படுத்தியதாக அந்தப் புகார்கள் கூறுகின்றன. அது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலிஸ் கூறியது.

செல்வி ரைசா ஞாயிறு அன்று "மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தக்கூடிய" கருத்துகளைத் தெரிவித்தற்கு வருத்தம் தெரிவித்த துடன் அக்கருத்துகளால் புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

மசெகவின் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மசெகவின் ஆக இளைய வேட்பாளரான குமாரி நடியா, "சிங்கப்பூர் இளையர்கள் மாறுபட்ட அனுபவங்களையும் மாறுபட்ட புரிந்துணர்வையும் கொண்டவர்கள். நாட்டின் வரலாற்றில் 1960ல் நடந்த இனக்கலவரம் போன்ற மோசமான நிகழ்வுகளை இவர்கள் சந்தித்ததில்லை," என்றார்.

"இன்றைய இளையர்கள் சகிப்புத்தன்மை, இன நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு அப்பால், சங்கடமான அல்லது மக்களில் ஒரு பகுதியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் உரையாடல்களை நிகழ்த்த விரும்புகின்றனர். அவர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசுவதில் துணிவுமிக்கவர்கள். மேலும் இந்தப் போக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன்.

"இளையர்களின் இதுபோன்ற புதிய வழக்கநிலை உருவாவதும் நல்லது என்றே நினைக்கிறேன்.

"இணையம் வழி பலவற்றைக் கற்று வளர்ந்து வருபவர்கள் இன்றைய இளையர்கள். எனவே சிங்கப்பூர் கலாசாரத்தில் சில மேற்கத்திய கருத்தியல்புகளும் நுழைந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

"இருப்பினும் நாம் இதை எவ்வாறு சிங்கப்பூருக்கே உள்ள தனித்துவத்துடன் தொடர்பு படுத்துவது? அதே சமயம், நாம் ஒற்றுமையுடன் விளங்க எத்தகைய பண்பை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்," என்றார் அவர்.