தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 111ல் ஏற்கெனவே கண்டறியப்பட்ட கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்த இருவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் ஒருவர் 7 வயது சிறுமி; மற்றவர் 18 வயது இளையர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஐவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் மேற்கொள்ளும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்; எண்மர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
இவற்றுள் 10 பேருக்கு கிருமித்தொற்று அறிகுறி ஏதுமில்லை.
சமூகத்தில் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் எண்மர் ஏற்கெனவே கண்டறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்.
நெக்ஸ் மால், சிட்டி பிளாசா, மரினா பே சேண்ட்ஸ், ரிவர்வேல் பிளாசா, புக்கிட் மேரா சென்ற்றலில் இருக்கும் தி பேக் வித் யென் பேக்கரி கடை, ஜூரோங்கில் இருக்கும் RuLe YoUr CuTz 2 முடி திருத்தும் கடை ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு நேற்று (ஜூலை 9) தெரிவித்தது.
கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.
முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 16ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 9ஆக இருந்தது.
ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 9ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 5ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித்தொற்று கண்ட, ஆனால், வேறு காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உள்ளது.