சிங்கப்பூரர்களை தொற்றுநோய்களில் இருந்து இன்னும் சிறந்த முறையில் பாதுகாக்கும் நோக்கத்துடன் தடுப்பூசிகளுக்கான மானியம் வரும் நவம்பர் முதல் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
தேசிய சிறார் நோய்த் தடுப்பாற்றல் திட்டம், தேசிய பெரியோர் நோய்த் தடுப்பாற்றல் திட்டம் ஆகியவற்றின்கீழ் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளுக்கான மானியம் எல்லா சுகாதார உதவித் திட்ட (சாஸ்) தனியார் மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் குறையும் என்றது அமைச்சு.
தகுதிபெறும் குடிமக்களான சிறாருக்கு முழு மானியம் உண்டு.
தடுப்பூசி மூலம் தவிர்த்துக்கொள்ளக்கூடிய தொற்றுநோய்களில் இருந்து சிறார்களை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் வரும் நவம்பர் முதல் பல புதிய தடுப்பூசிகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
அம்மை, சளிக்காய்ச்சல் போன்ற தடுப்பூசிகள் இவற்றில் அடங்கும்.
சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கக்கூடிய மானியம் $35 முதல் $125 வரை இருக்கும்.
மானியத்துடன் கூடிய தடுப்பூசி பட்டியல் இடம்பெற்று இருக்கின்ற, தேசிய அளவில் பரிந்துரைக்கப்படுகின்ற தடுப்பூசிகளுக்குக் குடிமக்கள் இந்த அளவுக்கு மானியம் பெறலாம். அதிக மானியம் காரண மாக குடிமக்கள் முன்பைவிட குறைந்த தொகையைச் செலுத்தினாலே போதுமானது.
தகுதி பெறும் சிறார்களுக்கு கட்டணம் இல்லை. தகுதி பெறுகின்ற முன்னோடி தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊசிக்கு $9 முதல் $16 வரை கட்டணம் இருக்கும். தகுதி பெறும் மெர்டேக்கா தலைமுறையினருக்கு ஒரு தடுப்பூசிக்கு கட்டணம் $18 முதல் $31 வரை வரம்புக்கு உட்பட்டுஇருக்கும். இதர வயது வந்த சிங்கப்பூரர்களுக்கு இது ஓர் ஊசிக்கு $35 முதல் $63 வரை இருக்கும்.
பலதுறை மருந்தகங்களில் குடிமக்களான பெரியவர்கள், தேசிய பெரியோர் நோய்த் தடுப்பாற்றல் திட்டத்தின்கீழ் 75 விழுக்காடு வரை மானியம் பெறுவார்கள். முன்னோடி மற்றும் மெர்ேடக்கா தலைமுறைகளைச் சேர்ந்த முதியவர்கள் கூடுதலாக முறையே 50% மற்றும் 25% மானியம் பெறுவார்கள்.
தகுதிபெறும் குடிமக்களான சிறார்களுக்கு அவர்களின் வளர்ச்சியின் ஏழு கட்டங்களில் நடத்தப்படும் பரிசோதனைகளுக்குப் பலதுறை மருந்தகங்களிலும் சாஸ் தனியார் மருந்தகங்களிலும் முழு மானியம் இருக்கும் என்று அமைச்சு குறிப்பிட்டு இருக்கிறது.
மானியம் பெற்ற தடுப்பூசி பட்டியலில் இடம்பெற்று இருக்கும் குறிப்பிட்ட வகை தடுப்பூசிகளுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். இப் பட்டியலை காலக்கிரம முறைப்படி அமைச்சு பரிசீலனை செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

