நீண்டகாலக் குடிநுழைவு அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் அத்தியாவசிய வர்த்தகம், வேலை தொடர்பாக பயணம் செய்வோருக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் எல்லை கடந்த பயணங்களை அனுமதிக்க சிங்கப்பூரும் மலேசியாவும் இலக்கு கொண்டுள்ளன.
வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் உசேனும் இதுகுறித்து நேற்று அறிவித்தனர்.
அத்தியாவசிய வர்த்தக, அலுவலகப் பணிகளுக்காக மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் சென்று வர ‘தடையற்ற இருதரப்புப் பயணமுறை’ வழிசெய்யும். இதற்குத் தகுதி பெறுவோர் நடைமுறைப்
படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டும். கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையைச் செய்துகொள்வது, தங்கள் பயணத் திட்டங்களைச் சமர்ப்பிப்பது ஆகியவை அவற்றில் அடங்கும்.
வர்த்தகத்துக்காகவும் வேலை தொடர்பாகவும் நீண்டகால குடி
நுழைவு அனுமதிச் சீட்டு வைத்திருப்போர் சிங்கப்பூரர்களும் மலேசியர்களும், இரு நாடுகளுக்கும் அவ்வப்போது சென்று வர மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு உதவியாக இருக்கும்.
வேலை செய்யும் நாட்டில் குறைந்தது தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இருந்துவிட்டு அவர்கள் குறுகிய கால விடுப்புக்கு தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். விடுப்பு முடிந்ததும் அவர்கள் மீண்டும் வேலை செய்யும் நாட்டுக்குச் சென்று குறைந்தது தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்குப் பணிபுரிய வேண்டும்.
இந்த இரண்டு திட்டங்களுக்கான செயல்முறைகளை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட இருநாட்டு அரசாங்கங்களுக்கும் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்குள் நுழையவும் வெளியேறவும் தேவையான சுகாதார நடைமுறைகள், விண்ணப்பம் செய்வதற்கான செயல்முறைகள் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு 10 நாட்கள் இருக்கும்போது வெளியிடப்படும்.
“சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே ஆழமான, நெருங்கிய உறவு இருக்கிறது. இருநாட்டு மக்கள் எல்லை கடந்து உறவாடும் பாரம்பரியம் உள்ளது. இருநாடு
களுக்கும் பொருளியல் பரிமாற்றங்கள் மிகவும் முக்கியம்.
“இந்தப் பயண ஏற்பாடுகள் மூலம் இந்தப் பரிமாற்றங்களையும் வெவ்வேறு பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதையும் படிப்படியாக மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டு வர விரும்புகிறோம். இந்தச் சவால்களை நாங்கள் மிகக் கவனமாக எதிர்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக சிங்கப்பூரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டார்.