மெரினா ஈஸ்ட்டில் உருவாகியுள்ள சிங்கப்பூரின் நான்காவது கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை வர்த்தக ரீதியாக செயல்படத் தொடங்கியது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தெரிவித்தது.
இங்கு நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் கேலன் குடிநீரை உற்பத்தி செய்யப்படும். இது கிட்டத்தட்ட 20,000 குடும்பங்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும்.
சிங்கப்பூருக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் 430 மில்லியன் கேலன் தண்ணீரின் 7 விழுக்காட்டுத் தண்ணீர் இந்த ஆலையில் இருந்து பெறப்படும்.
கெப்பல் மரினா ஈஸ்ட் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையான இது, அதிகாரபூர்வமாக ஜூன் 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. சிங்கப்பூரின் ஆகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையாக உருவாக்கப்பட்டுள்ள இங்கு நன்னீர், கடல் நீர் ஆகிய இரண்டையும் சுத்திகரிக்க முடியும்.
மழை பெய்யாத வறட்சியான காலங்களில் கடல்நீரை சுத்திகரிக்கும் பணிகளிலும் மழைக்காலங்களில் மெரினா நீர்த்தேக்கத்தில் உள்ள நன்னீரை எடுத்து குடிநீராக்கும் பணிகளிலும் இந்த ஆலை பயன்படுத்தப்படும்.
கடல் நீரைச் சுத்திகரிப்பதைக் காட்டிலும் நன்னீரைக் குடிநீராக்கு வதற்கு குறைந்த அளவிலான செயலாக்க ஆற்றலுடன் குறைவான செயல்முறைகளே தேவைப்படும்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியான காலங்களில் சிங்கப்பூரின் தண்ணீர் விநியோக மீள்திறனை இந்த ஆலை வலுப்பெறச் செய்யும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் ஜூ ஹீ கூறுகையில், “மலேசியாவில் இருந்து பெறப்படும் தண்ணீர், மழை நீர், மீள் சுழற்சியால் பெறப்படும் தண்ணீர் ஆகிய நீர் வளங்களைக் காட்டிலும் கடல் நீரைச் சுத்திகரித்து பெறப்படும் நீருக்கு அளவுக் கட்டுப்பாடு இல்லை. கடல் நீர் சுத்திரிப்பு ஆலை மூலம் நாம் வரையறையற்ற நீர் வளத்தை பெறுகிறோம்,” என்றார்.