இந்த ஆண்டின் முதல் பாதியில் 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தொழில்களின் வளர்ச்சி, உருமாற்ற முயற்சிகளுக்கு என்டர்பிரைஸ் சிங்கப்பூர் (ஈஎஸ்ஜி) திட்டங்களைப் பயன்படுத்தியுள்ளன. 2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த திட்டங்களால் பயனடைந்த நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இது இருமடங்காகும் என்று வர்த்தக தொழில் மூத்த துணையமைச்சர் சீ ஹாங் டாட் கூறியுள்ளார்.
மேலும் நிறுவனங்களுக்கு உதவ, மற்றொரு புதிய திட்டம் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்றும் அவர் சொன்னார்.
வர்த்தக தொழில் அமைச்சு, தொழில்துறைகள், அறிவார்ந்த நாடுகள், மின்னிலக்க அரசாங்க அலுவலகம், அரசாங்க தொழில்நுட்பம் ஆகியவை இணைந்து செயல் படுத்தும் GoBusiness உரிம இணையத்தளம், நிறுவனங்கள் வளர்ச்சிபெற பொருத்தமான அரசாங்கத் திட்டங்களைப் பரிந்துரைக்கும்.
கொவிட் -19 தொற்றுநோயால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள குறிப்பிட்ட தொழில்களுக்கு உதவும் நடவடிக்கைகள், வர்த்தகங்களிடமிருந்து ஆரோக்கியமான வரவேற்பைப் பெற்றுள்ளன என்றார் அவர்.
உணவு விநியோகம், மின் வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் திட்டங்களை 110,000க்கும் அதிகமான உணவு, பான தொழில்களும் 700 சில்லறை வர்த்தகங்களும் பயன்படுத்தியதாக திரு சீ கூறினார்.
மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 10,600 நிறுவனங்கள் மொத்தம் $9.4 பில்லியன் கடனைப் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.