உலகளவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 மில்லியனைத் தாண்டி விட்ட நிலையில், சுவாசக் கருவிகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.
இதையடுத்து, சுவாசக் கருவிகள் தயாரிப்பில் சிங்கப்பூரும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
‘ஆல்ஃபா வென்டிலேட்டர்’ சாதனங்களைத் தயாரித்து வரும் ‘அட்வான்ஸ்டு மெட்டெக்’ நிறுவனத்திற்குச் சுகாதார அறிவியல் ஆணையத்திடமிருந்து நெருக்கடிகால அனுமதி கிடைத்துள்ளது.
நெருக்கடிகால அனுமதி கிடைக்கும் முன்னரே இந்தியா, இந்தோனீசியா போன்ற வெளிநாடுகள் சுவாசக் கருவிகளைத் தயாரித்துத் தரும்படி அந்நிறுவனத்தை அணுகியுள்ளன.
இவ்வாண்டு இறுதிக்குள் மாதந்தோறும் 200 சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் வகையில் அந்த நிறுவனம் பணிகளை முடுக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்களது சுவாசக் கருவி அனைத்துலகத் தரநிலைகளுக்கு உட்பட்டிருக்கும் என்பதில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஏபல் ஆங் உறுதியாக இருக்கிறார்.
‘ஆல்ஃபா வென்டிலேட்டர்’தான் உலகின் முதல் தொலைச்சுகாதார சுவாசக் கருவி எனக் குறிப்பிட்ட திரு ஆங், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மிகவும் உகந்தது என்றும் குறிப்பிட்டார்.
தொலைவில் இருந்து ஒரு கணினி வழியாக, இணையம் மூலமாக இயக்க முடியும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நான்கு கிலோவிற்கும் குறைவான எடை கொண்டது என்பதால் எந்த இடத்திற்கும் அதனை எடுத்துச் செல்ல முடியும். அவசர மருத்துவ வண்டிகளிலும் மருத்துவமனைகளிலும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
தங்களது சுவாசக் கருவியின் விலை 10,000 வெள்ளிக்குக் குறைவாகவே இருக்கும் என்று திரு ஆங் குறிப்பிட்டார்.
தெமாசெக் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘அட்வான்ஸ்டு மெட் டெக்’ நிறுவனத்தின் ஆலை துவாசில் அமைந்துள்ளது.