தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) செயலாளராக திரு இங் சீ மெங் நீடிப்பதற்குத் தொழிலாளர் இயக்கத்தின் தலைமைத்துவம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பொதுத் தேர்தலில் செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணி தோல்வியடைந்ததை அடுத்து அந்த அணிக்குத் தலைமை வகித்த திரு இங், தொழிலாளர் இயக்கத்தின் தலைவராக நீடிப்பாரா என்று கேள்வி பரவலாக எழுந்தது.
அதற்கு நேற்று விடை கிடைத்தது. என்டியுசியின் தலைவர் மேரி லியூ நேற்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் திரு இங் தொடர்ந்து என்டியுசியின் தலைமைச் செயலாளராக நீடிப்பார் என்று தெரிவித்தார்.
“என்டியுசியின் தலைமைச் செயலாளர் பதவி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பதவி என்பதால், அது அரசியல் பொறுப்புகளிலிருந்து விலகி சுயேச்சையாக நிற்கிறது.
“என்டியுசியின் மத்தியக் குழு சகோதரர் இங் அதன் தலைமைச் செயலாளராகத் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது,” என்று திருவாட்டி லியூ அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 40 ஆண்டுகளாக ஓர் அமைச்சர் என்டியுசியின் தலைமைச் செயலாளர் பதவியை வகிப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. 1980ஆம் ஆண்டில் தொழிலாளர் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட திரு லிம் சீ ஓன், முதன் முதலாக பிரதமர் அலுவலக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
என்டியுசி மத்தியக் குழு தங்களுக்குள் தலைவர், தலைமைச் செயலாளர், இதர முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.
மத்தியக் குழுவின் உறுப்பினர்களை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தொழிற்சங்கங்கள் மாநாட்டில் பங்கேற்கும் பேராளர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
என்டியுசி மத்தியக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்கவும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையிலும் அரசாங்கத்திலிருந்து அமைச்சர் ஒருவர் என்டியுசி தலைமைப்
பதவிக்கு நியமிக்கப்படுகிறார்.
“இந்த இரு பொறுப்புகளும் பிரிக்கமுடியாக வகையில் பிணைக்கப்பட்டிருப்பதாலும் அவை இரண்டும் சுயேச்சையாக செயல்படும் தன்மை கொண்டவை.
“நாம் இன்னும் சவால்மிக்க காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், ஊழியர்களுக்கு உதவும் எங்கள் இலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சகோதரர் இங் சீ மெங், ஊழியர் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவற்றை முன்னெடுத்து செலுத்தியிருக்கிறார். இந்தப் பணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்தப் பயணம் தொடர நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்,” என்றும் திருவாட்டி லியூ கூறினார்.
இது குறித்து நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த திரு இங், விரைவில் தாம் அமைச்சரவையிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினாலும், என்டியுசியின் தலைமைச் செயலாளராகத் தொடர்ந்து நீடிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
“தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து என் மீது அளவில்லா பற்றும் நம்பிக்கையும் வைத்துள்ள ஊழியர்களுக்கு நான் தொடர்ந்து சேவையாற்றுவேன்.
“எனக்கு வலுவான ஆதரவு நல்கிய தொழிற்சங்கத் தலைவர்
களுடனும் என்டியுசி மத்தியக் குழுவுடனும் இணைந்து ஊழியர்களின் உரிமைகளுக்காக அயராது பாடுபடுவேன்,” என்றார் திரு இங்.