ஓங்: பள்ளிகளை மூடுவது சரியான அணுகுமுறையல்ல

ஓங்: பள்ளிகளை மூடுவது சரியான அணுகுமுறையல்ல

2 mins read
5b6dab9f-d821-4fb8-b22c-50154413d578
தெம்பனிஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுன் ஆசிரியர். படம்: எஸ்டி - குவா சீ சியோங் -

பள்ளிகளில் கொரோனா கிருமித்தொற்று பிரச்சினை தலைதூக்கும்போது பாதிக்கப்பட்டோரையும் பள்ளியில் அவர்களுடன் தொடர்பில் இருந்தோரையும் தனிமைப்படுத்தும் அணுகுமுறை கையாளப்படுவதாக கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

அதற்கு மாறாக, பள்ளிகளில் கொரோனா சம்பவங்கள் ஏற்படும்போது சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூடும் அணுகு முறையைக் கடைப்பிடிக்கவில்லை என்றார் அமைச்சர் ஓங்.

இன நல்லிணக்க தினத்தையொட்டி தெம்பனிஸ் உயர்நிலைப்பள்ளிக்கு திரு ஓங் நேற்று சென்றபோது இதுகுறித்து பேசினார்.

அண்மையில் மருத்துவப் பரிசோதனை மாதிரியில் தவறான பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்

பள்ளியைச் சேர்ந்த மாணவிக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தவறாக அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று விளக்கம் அளித்தன.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட 13 வயது சிறுவனுடன் அந்த மாணவி தொடர்பில் இருந்ததால் அவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆனால் மருத்துவப் பரிசோதனை மாதிரிகளைச் சோதனையிட்ட ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த குளறுபடியால் அந்த மாணவிக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மாதிரிகள் அந்த மாணவியுடையது என்று தவறாக பதிவு செய்யப்பட்டதால் இந்த குழப்பம் நேர்ந்தது, கிருமித்தொற்றால்பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே கிருமிப் பரவல் ஏற்பட்டால் அப்பிரச்சினையை எதிர்கொள்ள கல்வி அமைச்சு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கும் என்று திரு ஓங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான திட்டம் ஏற்கெனவே தயாராக இருப்பதாக அமைச்சர் ஓங் கூறினார்.

"பள்ளிகளில் கொரோனா கிருமிப் பரவல் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட மாணவர் பயிலும் நிலையைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் வீட்டிலிருந்தவாறு இணையம் வழி பாடம் கற்பிக்கப்படுகிறது," என்றார் அமைச்சர் ஓங்.

"பாதிக்கப்பட்டோரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் சுற்றி தடுப்பு வேலி போடுவதுபோல் அவர்களை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும்.

"பள்ளியில் இருக்கும் மற்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாதிக்கப்பட்ட வகுப்பு அல்லது நிலையைச் சேர்ந்தோரை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும்.

"பிரச்சினை ஏற்பட்டுவிட்டது என்பதற்காக பள்ளிக்கூடத்தையே மூடுவது சரியான அணுகுமுறையல்ல," என்று அமைச்சர் ஓங் கூறினார்.

தமது அணுகுமுறையை பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் புரிந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஓங், அது தமக்கு ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்தார்.

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை ஒன்று மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டபோது மற்ற நிலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் சென்றதை அமைச்சர் சுட்டினார்.