பள்ளிகளில் இனம், சமயம் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்து பரிணமிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கடந்து செல்ல உதவுவதில் அவை பெரும்பங்கு ஆற்றுகின்றன என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
இனம், சமயம் குறித்த இக்கால இளையர்களின் கண்ணோட்டம் வேறாக உள்ளது என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று சென்ற திரு ஓங், அங்கு மாணவர்களுடன் சேர்ந்து இன நல்லிணக்க நாளைக் கொண்டாடினார்.
தமக்கு முந்தைய தலைமுறையினர் பன்முகத்தன்மை, இணைந்து வாழ்தல் குறித்து சகிப்புத்தன்மையுடன் கூடிய கண்ணோட்டத்தைக் கொண்டிருந்ததாகக் கூறிய அமைச்சர், தம்முடைய தலைமுறையினர் மற்ற கலாசாரங்களை ஏற்றுக்கொண்டு, மதிப்பளித்து வருவதாகச் சொன்னார்.
“ஆனால், ஒன்றாக அமர்ந்து உணர்வுபூர்வமான விஷயங்கள் குறித்து கலந்துரையாடலாம் என்று எனது தலைமுறையினரைச் சேர்ந்தவர்களைக் கேட்டால், அதை அவர்கள் சற்று சிரமமாகவும் நெருடலாகவும் அசௌகரியமாகவும் உணர்கின்றனர்,” என்று திரு ஓங் கூறினார்.
“இந்தத் தலைமுறையினர் மாறுபட்டவர்கள். அவர்கள் உண்மையிலேயே அந்த விஷயங்கள் குறித்துப் பேச விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு அதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டியது அவசியம். அந்த விஷயத்தில் அவர்கள் நேர்மையாக உள்ளனர்,” என்றார் அமைச்சர்.
நற்பண்பு, குடியுரிமைக் கல்வி வகுப்புகளின்போதும் மற்ற நேரங்களிலும் கருத்தாழமிக்க கலந்துரையாடல்களை பள்ளிகளில் அதிகளவில் நடத்தும்படி பள்ளி முதல்வர்களைக் கல்வி அமைச்சு ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பகடி செய்தல், சமூக ஊடகப் பயன்பாடு, இனம், சமயம் போன்ற சமகால விஷயங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இரு வாரங்களுக்கு ஒருமுறை மாணவர்களை ஈடுபடுத்தும் என்று கடந்த மார்ச் மாதம் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அம்சத்தில் நிபுணத்துவம் பெற்று, அத்தகைய கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து வழிநடத்தும் விதமாக அதிகமான ஆசிரியர்களுக்குத் தமது அமைச்சு பயிற்சியளித்து வருகிறது என்று திரு ஓங் சொன்னார்.
ஆயினும், இனம், சமயம் குறித்து கலந்துரையாடும்போது அதன் பொருளடக்கம் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அமெரிக்க சமூக ஊடகம், அமெரிக்க ‘பாப்’ கலாசாரம் போன்றவை தொடர்ந்து நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், நாம் அமெரிக்கர்கள் அல்லர். நம்முடைய வரலாறு முற்றிலும் வேறுபட்டது,” என்றார் அவர்.
ஆசிரியப் பெருமக்கள், மாணவர்களைக் கவனமுடன் ஈடுபடுத்த வேண்டிய ஓர் அம்சம் இது என்றும் அவர் சுட்டினார்.
“மாணவர்களிடம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்துச் சொல்வது, வாசிக்க வைப்பது மட்டும் கைகொடுக்காது என நான் கருதுகிறேன். அவர்களை ஈடுபாடுகொள்ளச் செய்வதும் அவசியம்,” என்றார் அமைச்சர்.
இவ்வாண்டு இன நல்லிணக்க நாள் இம்மாதம் 21ஆம் தேதி வருகிறது. ஆனால், இடைப்பருவ விடுமுறைக் காலத்தின்போது அந்நாள் வருவதால், முன்னதாகவே அது கொண்டாடப்பட்டது.
இதனிடையே, கல்வி இரண்டாம் அமைச்சரான இந்திராணி ராஜா, ஜுயிங் தொடக்கப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இன நல்லிணக்க நாளைக் கொண்டாடினார்.