சுவா சூ காங் நூலகம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களுக்கு நூல்களை இரவல் வழங்க புதிய திட்டம் ஒன்றை தேசிய நூலக வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
அங்குள்ள 'லாட் ஒன்' கடைத்தொகுதியின் முதலாம் தளத்தில் புத்தக இரவல் சாதனம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அக்கடைத்தொகுதியின் நான்காம் தளத்தில் நூலகம் அமைந்துள்ளது.
எல்லா வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற, அதிகம் விரும்பி வாசிக்கப்படும் ஆங்கிலப் புத்தகங்கள் இந்தச் சாதனத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் அதில் புதிய புத்தகங்கள் வைக்கப்படும். ஏதேனும் ஒரு புத்தகம் 15 நாள்களாக இரவல் பெறப்படவில்லை எனில் மறுநாள் அது அகற்றப்படும்.
அந்தச் சாதனத்தில் இருந்து இரவல் பெறும் புத்தகங்களை எந்த நூலகக் கிளையிலும் திரும்ப ஒப்படைக்கலாம். இரவல் பெறக்கூடிய புத்தகங்களின் அதிகபட்ச எண்ணிக்கை, புதுப்பிப்புச் சலுகைகள், இரவல் காலம் ஆகியவற்றில் மாற்றமில்லை.
புத்தகங்களுக்கு 264 இடங்களும் முன்பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள், சஞ்சிகைகள், ஒலிஒளி வட்டுகள் ஆகியவற்றுக்காக 88 இடங்களும் இந்தச் சாதனத்தில் இருக்கின்றன.
புத்தகங்களை இரவல் பெறுமுன் தேசிய நூலக வாரியத்தின் கைபேசிச் செயலி அல்லது வாரியத்தின் மின்சேவையகம் அல்லது தீவெங்கும் அதன் கிளைகளில் உள்ள முன்பதிவுப் பெட்டகங்கள் வாயிலாக வாசகர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
இரவல் சாதனத்தின் தொடுதிரை மூலமாக, நூலகப் பயனாளர்கள் புத்தகங்களை மேலோட்டமாகப் பார்க்கவும் இரவல் பெறவும் அல்லது மின்புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
'லாட் ஒன்' கடைத்தொகுதி திறந்திருக்கும் நேரமான காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் புத்தக இரவல் சாதனமும் செயல்படும்.

