தெம்பனிஸ், ஈசூன் வட்டாரங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிப்போர் வரும் வாரங்களில் கொசுக்கள் அதிக அளவில் தட்டுப்படுவதைக் காண நேரிடலாம்.
ஆனால், அவை ரத்தத்தை உறிஞ்ச வரும் கொசுக்கள் அல்ல. 'புரோஜெக்ட் வூல்பேக்கியா' திட்டத்தின்கீழ், தேசிய சுற்றுப்புற வாரியம் இந்தச் சிறப்பு 'ஏடிஸ் ஏகிப்டி' வகை கொசுக்களை ஈசூன், தெம்பனிஸ் வட்டாரங்களில் இருக்கும் 1,455 வீவக புளோக்குகளில் விடவுள்ளது.
இந்தப் பணிகள் 2022 மார்ச்சில் நிறைவுறும்.
இந்தச் சிறப்பு 'ஏடிஸ் ஏகிப்டி' ஆண் கொசுக்கள் 'வூல்பேக்கியா' பாக்டீரியத்தைச் சுமந்து செல்லும். இவற்றுடன் இனப்பெருக்கம் செய்யும் பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்காது. இதன்மூலம் டெங்கியை ஏற்படுத்தும் 'ஏடிஸ்' கொசுக்களின் எண்ணிக்கை ஒடுக்கப்படும்.
ஈசூனிலும் தெம்பனிசிலும் சில இடங்களில் இந்த 'வூல்பேக்கியா' கொசுக்கள் விடப்பட்டு, சோதித்துப் பார்க்கப்பட்டன. அதன்பின், சில பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 100 'கிராவிட்ரேப்ஸ்' சாதனங்களிலும் வாரத்திற்கு கிட்டத்தட்ட இரு கொசுக்கள் மட்டுமே பிடிபட்டன. 2019 நவம்பரில் இந்த எண்ணிக்கை 20 முதல் 30ஆக இருந்தது.
கொசுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் அப்பகுதிகளில் டெங்கி பாதிப்பும் குறைந்ததாக வாரியத்தின் சுற்றுப்புறச் சுகாதார நிலையத்தின் இயக்குநரும் இணைப் பேராசிரியருமான திரு இங் லீ சிங் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டில் மொத்தம் 15,998 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் இப்போதே அந்தப் பாதிப்பு 17,249ஐத் தாண்டிவிட்டது. டெங்கி தொற்று காரணமாக இவ்வாண்டில் குறைந்தது 16 பேர் உயிரிழந்து விட்டனர்.

